இந்தியாவில் உச்சத்தில் கொரோனா... அனைத்து மாநில ஆளுநர்களுடன்... பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை
டெல்லி: கொரோனா பாதிப்பு தொடர்பாகப் பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அனைத்து மாநில ஆளுநர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்தக் கூட்டத்தில் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் பங்கேற்கிறார்.
இதில் கொரோனா பரவல் குறித்தும், அதனை நிறுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு நடைபெறும் அனைத்து ஆலோசனைக் கூட்டங்களைப் போலவே இதுவும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு தொடர்பாகப் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள ஏதுவாக டிக்கா உத்சவ் என்ற தடுப்பூசி திருவிழாவை நடத்துமாறு அனைத்து மாநில முதல்வர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். அதன்படி கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி திருவிழா நடைபெற்றது.