இதுதான் இந்தியா.. ராமர் கோயிலுக்கு தங்கத்தில் செங்கல் தருவேன்.. முகலாய வம்சாவளியின் யாகூப் அறிவிப்பு
டெல்லி: கடைசி முகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித்தோன்றல் எனக் கூறப்படும் இளவரசர் யாகூப் ஹபீபுதீன் துசி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக முஸ்லிம்கள் இந்துக்களுடன் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அயோத்தி நில சர்ச்சை குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், அயோத்தி நில தகராறு தொடர்பாக வழங்கிய தீர்ப்பில், 2.77 ஏக்கர் நிலத்தை ராம்லல்லாவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. மசூதி கட்டுவதற்கு பொருத்தமான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃப் வாரியத்திற்கு வழங்க நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை "வரலாற்று சிறப்பு வாய்ந்தது" என்றும், தீர்ப்பை அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் யாகூப் கூறினார்.
"அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும், இதனால் மதச்சார்பின்மை மற்றும் மத சகோதரத்துவத்தின் ஒரு உதாரணம் உலகிற்கு முன் வைக்கப்படும்" என்று அவர் கூறினார்.
மொத்த இந்தியாவும் அமைதியா இருக்கு.. பாகிஸ்தான் மீடியாக்கள் மட்டும் ஏன் இப்படி?
கோயிலில் பயன்படுத்த ஒரு தங்க செங்கலை வழங்கப்போவதாக ஏற்கனவே யாகூப் அறிவித்திருந்தார். தான் அளித்த வாக்குறுதியில் இப்போதும், உறுதியாக இருப்பதாகவும், செங்கலை பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதாகவும் அவர் கூறினார். "தங்க செங்கலுக்கான எனது வாக்குறுதியில் நான் உறுதியாக இருக்கிறேன். கோயிலுக்கு அடித்தளம் அமைக்கும் போது, நான் செங்கலை பிரதமரிடம் ஒப்படைப்பேன்." என்றார்.