நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி
உ.பி., காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
டெல்லி: முழு நேர அரசியலில் குதித்துள்ளார் பிரியங்கா காந்தி. உத்தரப் பிரதேச கிழக்கு மாநில பொதுச் செயலாளராக அவரை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. பல வருடங்களாக அவரது வருகைக்காக காத்திருந்த காங்கிரஸ் தொண்டர்கள் பூரிப்பில் உள்ளனர்.
பிரியங்கா காந்தி கல்யாணம் ஆவதற்கு முன்பே அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் அவரது பாட்டி இந்திராவை போலவே சுறுசுறுப்பு, தெளிவு, என அனைவரையும் இளம் வயதிலேயே ஈர்த்தார்.
ஆனால் மன்மோகன்சிங்-சோனியா நல்லுறவு, இளைஞர்களுக்கு ராகுல் காந்தியின் வருகை, பிரியங்காவின் திருமணம் போன்றவற்றால் அது நிகழாமல் போனது. ஆனால் இப்போது உத்திரபிரதேசத்தின் பொறுப்பு கையில் வந்து சேர்ந்திருக்கிறது.
பிரதமர் மோடி
சோனியா காந்தி, உத்தரபிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதி எம்பியாக உள்ளார். ஆனால் அவருக்கு இப்போது உடல்நிலை சரியில்லை. அதனால் தொகுதிக்கும் சரியாக வர முடிவதில்லை. இதற்கு நடுவில் 5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு எப்பவுமே வராத பிரதமர் மோடி ரேபரேலிக்கு வந்து நிறைய நலத்திட்ட உதவிகளை செய்து விட்டு போனார். இன்னும் அதிக வளர்ச்சி பணிகளை செய்ய பாஜக தலைவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
பிரியங்கா நியமனம்
நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சி மட்டும் மும்முரத்தில் ஈடுபடவில்லை. தன்னுடைய கோட்டை என கருதப்பட்டு வரும் உத்திரபிரதேசத்தை இழக்க காங்கிரஸ் விரும்பவில்லை. எவ்வளவுதான் பாஜக சார்பாக உதவிகள் செய்யப்பட்டாலும் காங்கிரஸ் மீதான மதிப்பு அம்மக்களுக்கு கொஞ்சமும் குறையவில்லை. எனவே எக்கு கோட்டையை விட்டுக்கொடுக்க கூடாது என்பதை ஆழமாக உணர்ந்துள்ள காங்கிரஸ், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தியை நியமனம் செய்துள்ளது.
ஈடு கொடுப்பார்
அது மட்டும் இல்லை, உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ்-மாயாவதி கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் தரப்படவில்லை. கூட்டணியில் இடம் கிடைக்காததால் பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டு வந்தது. மேலும் அகிலேஷ்-மாயாவதி இணைந்து வலுவான கூட்டணி அமைத்துள்ளதால், அவர்களுக்கு ஈடு கொடுக்க பிரியங்காவால் மட்டுமே சாத்தியம் என்பதை ராகுல் உணர்ந்துள்ளார்.
சுற்றுப்பயணம்
அதனால்தான் இம்மாநிலத்தில் தனித்து விடப்பட்ட தங்களின் கட்சியை தூக்கி நிறுத்த பிரியங்காவை களம் இறக்கியுள்ளார் ராகுல் காந்தி. உபி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சியின் பலத்தை பிரியங்கா அதிகரிப்பார் என்று ராகுல் நம்புகிறார்.
பலமான போட்டி
இதுவரை அம்மா, அண்ணனுக்கு பின்புலமாக இருந்து பிரச்சாரம் செய்து வந்த பிரியங்கா, இப்போது நேரடியான அரசியலில் இறங்கி உள்ளார். பிரியங்காவின் இந்த அதிரடி வருகை, மாயாவதி-அகிலேஷ் யாதவ் கூட்டணிக்கு கண்டிப்பாக பலமான போட்டியாக இருப்பார் என்றும், நிச்சயம் உபியை காங்கிரசுக்குதான் என்றும் தொண்டர்கள் அதீத நம்பிக்கையை மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்