டெல்லி இந்தியா கேட்டில் பிரியங்கா காந்தி மீண்டும் போராட்டம்- அமைதியாக போராட வேண்டுகோள்!
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லி இந்தியா கேட்டில் போராட்டம் நடத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இணைந்து கொண்டார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக சில நாட்களுக்கு முன்னர் திடீரென இந்தியா கேட் பகுதியில் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டம் நடத்தினார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.
சுமார் 2 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் இந்தியா கேட்டிலிருந்து பிரியங்கா காந்தி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் டெல்லியில் இன்றும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று இரவு டெல்லி இந்தியா கேட் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பிரியங்கா காந்தியும் காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரியங்கா காந்தி, குடியுரிமை சட்ட திருத்தம் ஏழைகளுக்கு எதிரானது. ஏழைகளை கடுமையாக பாதிக்கக் கூடியது.
இச்சட்ட திருத்தத்துக்கு எதிராக அனைவரும் அமைதி வழியில் போராட வேண்டும் என்றார்.