பலிக்காத பிரியங்கா காந்தி மேஜிக்.. பிரச்சாரம் செய்த பெரும்பாலான இடங்களில் காங்கிரசுக்கு பின்னடைவு
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் பெரிதாக நம்பிக் கொண்டிருந்த பிரியங்கா காந்தி மேஜிக் பலிக்கவில்லை என்பது தேர்தல் டிரெண்டிங்கை வைத்து பார்த்தால், உறுதியாகியுள்ளது.
பிரியங்கா பிரச்சாரத்தைவிடவும், மோடி மற்றும் அமித்ஷா பிரச்சாரங்களுக்குதான் வாக்குகளை அறுவடை செய்யும் சக்தி இருந்துள்ளது. இந்த புள்ளி விவரம் அதுகுறித்த பார்வையை உங்களுக்கு அளிக்கும்.
தற்போதைய டிரெண்ட் நிலவரப்படி, மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட 145 தொகுதிகளில், 90 தொகுதிகளில் பாஜகதான் முன்னிலையில் உள்ளது. பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற 137 பொதுக்கூட்டங்கள் நடைபெற்ற இடங்களுக்கு உட்பட்ட தொகுதிகளில் 83ல் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.
உ.பி.யில் கை கொடுக்காத மெகா கூட்டணி.. அகிலேஷ்-மாயாவதிக்கு 'ஷாக்' தோல்வி
மோடி, அமித்ஷா அதிரடி ஆட்டம்
எனவே, மோடி மற்றும் அமித்ஷா பங்கேற்ற பொதுக் கூட்டங்களின் பலனை பார்த்தால், இது 57% ஸ்ட்ரைக் ரேட் எனலாம். கிரிக்கெட்டில் சொல்வார்களே, சந்தித்த பந்துகள் மற்றும் அடித்த ரன்களை வைத்து, அதுபோல இங்கும் இது ஸ்ட்ரைக் ரேட். அப்படியானால் மோடி-அமித்ஷா பங்கேற்ற 2 கூட்டங்களில் ஒன்றிலாவது பாஜக வென்றுவிடுகிறது என்பதே நிதர்சனம்.
அண்ணன்-தங்கை
அதேநேரம், பிரியங்கா காந்தி பங்கேற்றது, 37 பொதுக்கூட்டங்கள். அதில் காங்கிரஸ் கூட்டணி 8 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதேபோல ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தது, 115 பொதுக்கூட்டங்களில். அதில், காங்கிரஸ் 28 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. ஆக, ராகுல் காந்தி-பிரியங்கா காந்தி ஆகிய இருவரின் ஸ்ட்ரைக் ரேட் 21% மட்டுமே. அதாவது, 4 கூட்டங்களில் ஒரு கூட்டத்திற்கும் குறைவாகத்தான் பலன் கிடைக்கிறது.
இந்திராவின் பேத்தி
ராகுல் காந்தியின் தலைமை தோல்வியை சந்தித்ததால்தான், பிரியங்கா காந்தியை களத்திற்கு கொண்டு வந்தது, காங்கிரஸ். ஆனால், இந்திராவின் பேத்தியால் இரும்பு மனுஷி பெயரை காப்பாற்ற முடியவில்லை, என்பதுதான் இப்போதைய டிரெண்ட்.
காக்கும் தேவதூதன்
காங்கிரசிடமிருந்த கடைசி நம்பிக்கையும் இப்படி பொய்த்துவிட்ட வேதனையில் உள்ளனர் கதர் வேட்டி கட்சியினர். இனி அந்த கட்சியை காப்பாற்றப்போகும் தேவ தூதன் யார் என்பதை தேடும் படலம் ஆரம்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், இதுவரை அந்த நம்பிக்கை கானல் நீராகவே காட்சியளிக்கிறது.