கர்நாடகா வருகிறது பிரியங்கா காந்தி புயல்… பிரச்சார களத்தில் குதிக்க திட்டம்
டெல்லி:2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி கர்நாடகாவில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். அவரது இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியின் அதிரடி நடவடிக்கையாக கணிக்கப் படுகிறது.
பிரியங்காவின் நியமனம் பற்றி வரவேற்பும் எதிர்ப்பும் பல தரப்புகளில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அவர் வரும் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக மாநில பிரச்சாரக் குழுத் தலைவர் ஹெச்.கே. பாட்டீல் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகா வரும்போது, பிரியங்காவும் அங்கே வருவார்.
பாஜக அரசின் தோல்விகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்வது காங்கிரசின் முக்கிய பணியாகும். 2014 ம் ஆண்டின் போது பாஜக அளித்த வாக்குறுதிகள் என்னவானது என்பதையும் மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
பட்ஜெட் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட வருமானம் முழுமையான பலனை தராது. இந்த அறிவிப்பின் மூலம் விவசாயிகளின் பிரச்சனைகள் தீராது என்றார்.
1999ம் ஆண்டு பெல்லாரி தொகுதியில் பிரியங்கா முதன் முதலில் பிரசாரம் செய்தார். விரைவில் கர்நாடகாவில் பிரசாரம் செய்ய உள்ளாரா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.