தோனி ஸ்டைலில் 'சிக்சர்' அடிக்க விரும்பும் பிரியங்கா காந்தி..வாரணாசியில் போட்டியிடுவாரா? 50-50 சான்ஸ்
Recommended Video
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதற்கு 50-50 சான்ஸ் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதன் முதலாக தேர்தல் களத்தில் இறங்கி போட்டியை பங்கேற்க ஆசைப்படும் பிரியங்கா காந்தி முதல் பாலிலேயே சிக்சர் அடிக்க ஆசைப்பட்டுள்ளார். அதுவும் எப்படி என்றால், கிரிக்கெட் வீரர் தோனி யார்க்கர் பாலில் ஹெலிகாப்டர் ஷாட் சிக்சர் அடிப்பாரே அப்படி அடிக்க ஆசைப்பட்டுள்ளார் பிரியங்கா காந்தி.
அதாவது நாட்டின் பிரதமர் மோடிக்கு எதிராக பாஜகவின் கோட்டையான வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அனுமதித்தால் அங்கு போட்டியிட தயார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரிங்கா காந்தி அறிவித்தார்.
வேட்பாளரை அறிவிச்சாச்சு.. அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமாயிருச்சு.. வேறெங்க.. நம்ம அதிமுகவில்தான்!
இந்திராவே வந்துவிட்டார்
இதனால் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்திராவே திரும்பி வந்துவிட்டதை போன்று தொண்டர்கள் உத்தரப்பிரதேசத்தில் களப்பணி ஆற்றிவருகிறார்கள். அங்கு மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கணிசமான தொகுதிகளை கைப்பற்றினால் தான் ஆட்சி அமைக்க முடியும்.
ஒதுங்கிய பகுஜன்சமாஜ்
இந்நிலையில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் (நம்மூர் திமுக-அதிமுக போல) இணைந்து பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளன. எனினும் இந்த கட்சிகள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
பிரியங்கா அறிவிப்பு
இந்நிலையில் பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை எதிர்த்த வாராணாசியில் நிற்க தயார் என அறிவித்ததையடுத்து அங்கு சமாஜ்வாதி சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஷாலினி யாதவ்வை திரும்ப பெற தயார் என சமாஜ்வாதி கட்சி அறிவித்தது.
வாரணாசியில் பிரச்சாரம்
47 வயதாகும் பிரியங்கா காந்தி, வாரணாசியில் மிகப்பெரிய அளவில் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளார். அங்கு மூன்று முறை படகில் பயணித்து கங்கை கரை மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மோடி இங்கு வென்றுவிட்டு உலகம் சுற்றுகிறார். ஆனால் இங்கு காங்கிரஸ் வென்றால், வாரணாசியில் உள்ள கிராமத்தில் தங்கி மக்கள் பணி ஆற்றுவேன் என பிரியங்கா காந்தி கூறினார்.
பிரியங்கா போட்டி?
இதனால் வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் அங்கு தோற்றாலும், வென்றாலும் கவலையில்லை என்ற மனநிலையில் இருக்கிறார். இந்நிலையில் அவர் அங்கு போட்டியிடுவதற்கு 50-50 சான்ஸ் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். விரைவில் முடிவு தெரிந்தவிடும்.