பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை.. மோடிக்கு எதிராக 'வாரணாசியின் பாகுபலியை' களமிறக்கியது காங்கிரஸ்
Recommended Video
டெல்லி: வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அஜய் ராய் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியிடப்போவதாக கூறப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார். நாளை அவர் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் மே 19ம் தேதிதான், வாரணாசியில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.
திருமாவளவனுக்கு மத்திய அமைச்சராக, அனைத்து தகுதியும் உள்ளது... கரு.பழனியப்பன் சொல்கிறார்
பிரியங்கா காந்தி
இந்த நிலையில்தான், மோடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என பல்வேறு செய்திகள் வெளியாகின. இதனால் வாரணாசி தேர்தல் தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில், அஜய் ராய் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரியங்கா காந்தி தேர்தல் களத்தில் குதிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
அஜய் ராய் யார்?
அஜய் ராய் வாரணாசி தொகுதியில் வலுவான காங்கிரஸ் தலைவராகும். உத்தர பிரதேச சட்டசபைக்கு 5 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஜய் ராய். ஆனால், இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால், பாஜகவின் மாணவர் பிரிவில் உறுப்பினராக இருந்துதான் அரசியலில் கால் வைத்துள்ளார் அஜய் ராய்.
பாஜகவில் விலகல்
1996 முதல் 2007ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை, கோலஸ்லா தொகுதியில் இருந்து பாஜக சார்பில், எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், அஜய் ராய். ஆனால், லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்பதற்காக பாஜகவில் இருந்து விலகிய அஜய் ராய், சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து, 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தோல்விதான் பரிசாக கிடைத்தது.
காங்கிரஸ் கட்சியில்
அதேநேரம், 2009ம் ஆண்டு, கோலஸ்லா தொகுதி இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி கண்டவர். அந்த அளவுக்கு இத் தொகுதியில் அவருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. இதன்பிறகுதான், காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார், அஜய் ராய். தொகுதி மறு சீரமைப்பின்போது, கோலஸ்லா தொகுதி, மாற்றப்பட்டு பிந்த்ரா தொகுதியானது. அப்போதும் 2012ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அத்தொகுதியில் வெற்றி பெற்றார்.
பாகுபலி
வாரணாசியிலேயே பிறந்து வளர்ந்த மண்ணின் மைந்தன்தான், இந்த அஜய் ராய். லோக்கல் பாகுபலி என்று வாரணாசி மக்களால் அழைக்கப்படுபவர் அஜய் ராய். சீட்கஞ்ச் காவல் நிலையத்தில், ரவுடி பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. 1991ம் ஆண்டு வாரணாசி துணை மேயர் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட வழக்கில் அஜய் ராய் பெயர் இடம் பெற்றது. பிறகு அந்த வழக்கில் விடுதலையானார். அஜய் ராய் அண்ணன் அவாதேஷ் ராய், லஹுராபிர் பகுதியில், 1994ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோடிக்கு எதிராக
பாஜகவில் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து, சமாஜ்வாதி சென்று, சுயேச்சையாகவும் ஜெயித்து பிறகு காங்கிரசில் இணைந்துள்ள அஜய் ராய், இப்போது பாஜகவின் மிக முக்கிய தலைவரும், நாட்டின் பிரதமருமான நரேந்திர மோடியை நேருக்கு நேர் வாரணாசியில் எதிர்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.