2 மணி நேரம்.. இந்தியா கேட் பகுதியை ஸ்தம்பிக்க வைத்த பிரியங்கா காந்தி தர்ணா.. மாணவர்களுக்கு ஆதரவாக
டெல்லி: குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் ஜாமியா பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி, ஆகியவற்றை கண்டித்து டெல்லி இந்தியா கேட் பகுதியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி திடீரென தர்ணா போராட்டத்தில் குதித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
டெல்லி இந்தியா கேட் பகுதியில் பிரியங்கா காந்தி இவ்வாறு போராட்டம் நடத்தியது, முதலிலேயே ஊடகங்களுக்கு மட்டுமல்ல, உளவுத்துறைக்கு கூட தெரியாது. இதனால்தான், அவர் போராட்டத்தில் குதித்த போது சுமார் 10 காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமே அவரை சுற்றிலும் அமர்ந்து இருந்தனர்.
இந்தியா கேட் பகுதிக்கு அருகே உள்ள சாலையில் அவர் அமைதியாக தர்ணா போராட்டத்தில் உட்கார்ந்தார். காவல்துறை, உளவுத்துறை, ஊடகம் என யாருக்குமே தெரியாமல் திடீரென பிரியங்கா காந்தி அங்கு வருகை தந்து போராட்டக்காரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கைகோர்த்தார்.
பிரியங்கா காந்தி வருகை தந்ததை அறிந்த பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கே.சி.வேணுகோபால், ஏ.கே. ஆண்டனி, பி.எல்.புனியா, அகமது படேல் ஆகிய மூத்த தலைவர்களும் அங்கே வந்து பிரியங்கா காந்தியுடன் அமர்ந்து அடையாள தர்ணா போராட்டத்தில் குதித்தனர்.
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு சமூக வலைத்தளத்தில் தனது கண்டனத்தை பிரியங்கா காந்தி தெரிவித்திருந்த நிலையில், நேரடியாகவே அவர், களம் வந்ததால், டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு நிலவியது. சுமார் 2 மணி நேரம், இவர் போராட்டம் தொடர்ந்தது. அப்போது, மாணவர்களும், காங்கிரஸ் தொண்டர்களும், பிரியங்கா காந்தியுடன் இணைந்து போராட்டம் நடத்த முயற்சி செய்து அங்கே முண்டியடித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பிரியங்கா போராட்டத்தால், படேல் சவுக், மத்திய செயலகம் மற்றும் உத்யோக் பவன் ஆகியவற்றின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டிருந்தன. படேல் சவுக் மற்றும் உத்யோக் பவனில் ரயில்கள் நிறுத்தப்படாது என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் ட்வீட் வெளியிட்டது.
போராட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய, பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில், அரசியல் சாசனத்தின் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியுள்ளது. நாட்டின் ஆன்மா போன்றவர்கள் மாணவர்கள். அவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். மாணவர்களுக்கு போராடும் உரிமை உள்ளது. மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.