என்னைத்தாண்டி தொண்டர்கள் மீது கை வைங்க.. போலீஸ் லத்தி முன்பாக நெஞ்சை நிமிர்த்திய பிரியங்கா காந்தி
டெல்லி: டெல்லி-நொய்டா எல்லையில், காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியபோது குறுக்கே சென்று பிரியங்கா காந்தி அவர்கள் மீது தடியடி விழாமல் தடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு, கொலையான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இருந்து இன்று கார் மூலமாக கிளம்பினர்.
அவர்களுடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் வாகனங்களில் அணி அணியாக கிளம்பினர்.
டெல்லியை தாண்டி நொய்டா செக்போஸ்ட் பகுதியில் வாகனங்கள் வந்தபோது அங்கு ஏற்கனவே குவித்து வைக்கப்பட்ட காவல்துறையினர் இந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.
ஹத்ராஸ் பயணம்.. ராகுல் காந்தியை பக்கத்தில் அமர வைத்து.. அசத்தலாக கார் ஓட்டும் பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாகனங்களை மேற்கொண்டு அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
அப்போது காரில் இருந்து கீழே இறங்கிய பிரியங்கா காந்தி தனது பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி சென்று தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி நடத்த விடாமல் தடுத்தார். அவர்கள் முன்பாக சென்று ஒரு அரண்போல நின்றார். எனவே போலீசார் மேற்கொண்டு தடியடி நடத்த முடியாமல் விலகினர்.
Our leader @priyankagandhi steps in to defend the party men from the thuggish UP police of @myogiadityanath pic.twitter.com/cUr71J8kCQ
— Lavanya Ballal | ಲಾವಣ್ಯ ಬಲ್ಲಾಳ್ (@LavanyaBallal) October 3, 2020
உயர் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் பிரியங்கா காந்தி தனது பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் தொண்டர்கள் மீது தடியடி விழுந்துவிடக்கூடாது என்பதற்காக துணிச்சலாக காவல்துறையின் லத்தி முன்பாக சென்று நெஞ்சு நிமிர்த்தி நின்றார். வழக்கமாக தலைவர்களைத் தான் தொண்டர்கள் பாதுகாத்து சூழ்ந்து நிற்பார்கள். ஆனால் இங்கு காங்கிரஸ் தொண்டர்களை பாதுகாக்க பிரியங்கா காந்தி களத்தில் நின்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.