பிரியங்கா காந்தி வீட்டு வளாகத்திற்குள்ளேயே புகுந்த கார்.. 5 பேர் கொண்ட கும்பல் நுழைந்ததால் பரபரப்பு
டெல்லி: காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு வளையத்தை தாண்டி, ஐந்து பேர் பயணித்த கார் ஒன்று புகுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய முக்கிய நபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) பாதுகாப்பை மத்திய அரசு சமீபத்தில் வாபஸ் பெற்றது.
தீவிரவாதிகள் உள்ளிட்டோரிடமிருந்து, முன்னாள் பிரதமரின் குடும்பத்தைச் சார்ந்த இவர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக, காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்களும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை எச்சரிக்கை செய்தன. இருப்பினும் அரசு தனது முடிவில் உறுதியாக இருந்த நிலையில் இப்போது பிரியங்கா காந்தியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த சம்பவம் நவம்பர் 26ஆம் தேதி பிரியங்கா காந்தியின் வீட்டில் நடந்துள்ளது. ஐந்து பேர் பயணித்த ஒரு கார், பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி பிரியங்கா காந்தியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து உள்ளது. அதுமட்டுமின்றி பிரியங்கா காந்தி வரை அனைவரும் சென்று புகைப்படமும் எடுத்துக் கொண்டு உள்ளனர்.
சர்ச்சைக்குரிய சர் க்ரீக் பகுதியில் சிறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் வாலாட்டும் பாக்.
இந்த தகவலை அவரது தரப்பு இன்று வெளியிட்டுள்ளது. பிரியங்கா காந்திக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிஆர்பிஎஃப் மற்றும் டெல்லி காவல்துறையினர் நடுவே இணக்கம் இல்லை என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவ்வாறு ஒரு கார் அவரது வீட்டுக்குள் நுழையும் போதும் இதற்கு அனுமதி கொடுப்பது யார் என்பதில் இந்த இரு தரப்புக்கும் நடுவே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதைப் பயன்படுத்திக்கொண்டு அந்த 5 பேரும் பிரியங்காவின் வீட்டுக்குள்ளேயே சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து சிஆர்பிஎஃப் தரப்பில் முறைப்படி காவல்துறையில், புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட பிறகும், பிரியங்கா காந்தி உள்ளிட்ட ராஜீவ் காந்தி குடும்பத்தினர் இன்னமும் இசட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தில்தான் உள்ளனர். அப்படி, இருந்தும் இதுபோன்ற பாதுகாப்பு குளறுபடி நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.