மோடி பிரதமர் இல்லையாம்.. புதிதாக ஒரு பெயர் சூட்டிய பிரியங்கா காந்தி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு புதிதாக ஒரு பெயரை சூட்டியுள்ளார், காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. எனவே உத்தர பிரதேச மாநிலம்தான், மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை நிர்ணயிப்பதில் முக்கிய மாநிலமாக உள்ளது. உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 26 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது.
இந்த நிலையில்தான், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசம் மாநில (கிழக்கு) பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார். பன்டேல்கன்ட் பகுதிக்குட்பட்ட சில தொகுதிகளிலும், ஃபதேபூரிலும் இன்று பேரணி மற்றும் பிரசார கூட்டங்களில் பங்கேற்றார்.
ஆகாயம் மேலே.. பாதாளம் கீழே.. சூடான சமோசாக்கள் ராகுல் காந்தி கையிலே!
மக்கள் விருப்பம்
அப்போது பிரியங்கா காந்தி பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் கொள்கை எப்போதுமே, மக்களின் எண்ணங்களுடன் ஒத்துப்போகக் கூடியது. பாஜகவின் கொள்கை மக்கள் எண்ணங்களுக்கு நேர் எதிர்மறையானது. பாஜக மக்கள் பிரச்சினைகளில் இருந்து விலகியே நிற்கிறது. மோடி தனது பதவிக்காலத்தின் அதிக நாட்களை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் கழித்துவிட்டு சாதாரண மக்களை எப்போதாவதுதான் சந்தித்தார்.
ஏழை மக்களுக்கு உதவி
பணமதிப்பு நீக்கம் சாமான்ய மக்களைதான் பாதித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும், அந்த நடவடிக்கையால் 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ளார்கள். ஆனால், கறுப்புப் பணம் ஏதும் மீட்கப்படவில்லை. பாஜக அரசு பெரும் முதலாளிகளின் கடனைத் தள்ளுபடி செய்த மதிப்பு ரூ.5,50,000 கோடி. ஆனால், காங்கிரஸ் கட்சி, அரசு பணத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுப்பதற்காக 'நியாய்' திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
தண்ணீர்
மோடி நாளை இங்கு வருவதால் மக்கள் பயன்படுத்த வேண்டிய பொது குடிநீரை வைத்து பாஜகவினர் சாலைகளை கழுவி வருகின்றனர். ஒரு பக்கம் ஆண், பெண், பள்ளிகளுக்கு செல்லும் பிள்ளைகள், விவசாய பயிர்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் இங்கு தவிக்கும்போது, இது அவசியமா? இந்த நாட்டின் காவலாளி என்று கூறிக்கொள்ளும் டெல்லியில் இருந்துவரும் மகாராஜா வருகைக்காக குடிநீரை பாஜகவினர் வீணடிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பிரச்சார் மந்திரி
பிரதமர் நரேந்திர மோடி, பெரு முதலாளிகள் துணையுடன், தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு உள்ளார். அவர் பிரதான் மந்திரி இல்லை. 'பிரதான் பிரச்சார் மந்திரி'. இவ்வாறு அவர் பேசினார். மோடி பிரபல நடிகர் அக்ஷய் குமாருடன் சிறப்பு பேட்டி நிகழ்ச்சியொன்றில் இன்று பங்கேற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.