ஒரே ஒரு முதல்வர் பதவியாவது இளைஞருக்கு கொடுங்கள்.. பிரியங்கா வைத்த கோரிக்கை
டெல்லி: காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற 3 மாநிலங்களில் ஏதேனும் ஒரு மாநிலத்துக்கு இளம் முதல்வரை தேர்ந்தெடுக்குமாறு பிரியங்கா காந்தி யோசனை தெரிவித்திருந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை.
அண்மையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மிசோரமில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ், தெலுங்கானாவில் வெற்றி பெறவில்லை.
வெற்றி பெற்ற 3 மாநிலங்களில் தற்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேச முதல்வர்கள் அறிவிக்கப்பட்டு விட்டார்கள். சட்டிஸ்கர் மட்டும் பாக்கி உள்ளது. இந்த முதல்வர்கள் தேர்வின்போது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு முக்கிய ஆலோசனைகளைக் கொடுத்துள்ளனர்.
முதல்வர் தேர்வில் சிக்கல்
3 மாநிலங்களில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு யாரை முதல்வராக தேர்வு செய்வது என்பது பெரிய தலைவலியாக இருந்தது. சீனியர்களுக்கு கட்சித் தலைவர்கள் ஆதரவாக இருந்தனர். அதேசமயம், இளம் தலைவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பலமாக இருந்தது.
முதல்வராகும் கமல்நாத்
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அவரது இல்லத்தில் நடந்து வந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் என கலவையாக கலந்து கொண்டு விவாதித்துள்ளனர். நீண்ட ஆலோசனைக்கு பின்னரே கமல்நாத் மத்திய பிரதேச முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
ராஜஸ்தானிலும்
இதேபோல ராஜஸ்தான் முதல்வரைத் தேர்ந்தெடுக்கவும் 2 நாட்களாகி விட்டது. அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக கட்சித் தலைமை இருந்தது. இளம் தலைவர் சச்சின் பைலட்டுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. இருப்பினும் தற்போது கெலாட்டுக்கே முதல்வர் பதவி போயுள்ளது. பைலட் துணை முதல்வராக்கப்பட்டுள்ளார்.
பிரியங்கா கொடுத்த யோசனை
ஆலோசனைக் கூட்டங்களின்போது பிரியங்கா காந்தி ஒரு யோசனையை வைத்துள்ளார். அதாவது ஏதாவது ஒரு மாநிலத்தில் இளம் தலைவருக்கு வாய்ப்பளியுங்கள் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அது சாத்தியமில்லாமல் போய் விட்டது. லோக்சபா தேர்தலை மனதில் வைத்து மூத்த தலைவர்களையே காங்கிரஸ் மேலிடம் முதல்வராக்கியுள்ளது.
சச்சின் பைலட் கவலை
இதில் மத்தியப் பிரதேச முதல்வர் பதவியை விரும்பிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா சீக்கிரமே சமரசமாகி விட்டார். ஆனால் ராஜஸ்தான் சச்சின் பைலட்தான் விடாப்பிடியாக இருந்தார். இவரை சமாதானப்படுத்துவதற்குள் ராகுல் காந்திக்கு போதும் போதுமென்றாகி விட்டதாம்.
புதிய வாய்ப்புகள்
தற்போது சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். இதேபோல ஜோதிர் ஆதித்ய சிந்தியாவையும் ம.பி. காங்கிரஸ் தலைவராக்கும் திட்டம் உள்ளதாம். லோக்சபா தேர்தலுக்கு மாநிலத்தை வலுப்படுத்தும் வகையில் தற்போதைக்கு மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பளித்திருந்தாலும் கூட எதிர்காலத்தில் இந்த இரு இளம் தலைவர்களும் தத்தமது மாநில முதல்வர் பதவிகளை அலங்கரிப்பார்கள் என்று தெரிகிறது.