நரேந்திர மோடியை யாருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் பாருங்கள் பிரியங்கா காந்தி! கொந்தளிக்கும் பாஜக
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடியை, மகாபாரத இதிகாசத்தின், வில்லன் பாத்திரமான துரியோதனனுடன் ஒப்பிட்டு, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி பேசியதற்கு, பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை, ஊழல்களின் நம்பர் 1 தலைவர் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குறிப்பிட்டு பேசியது காங்கிரசில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதன் பிறகு, ராகுல் காந்தியாகட்டும் அல்லது பிரியங்கா காந்தியாகட்டும், காங்கிரஸ் தலைவர்கள் பலரின், கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார் மோடி.
விதிமுறைகளை மீறுகிறார் மோடி.. தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை... நாராயணசாமி ஆவேசம்
மோடியை குத்துச்சண்டை வீரருடன் ஒப்பிட்டு கடுமையாக ராகுல் காந்தி நேற்று கலாய்த்து பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றியிருந்தார். இந்த நிலையில் ஹரியானா மாநிலம் அம்பாலா நகரில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தியும், மோடியை கடுமையாக விளாசினார்.
அவர் கூறுகையில், "எந்த ஒரு, மக்கள் சார்ந்த பிரச்சினையையும், பாஜக தலைவர்களால் பேச முடியவில்லை. அதன் காரணமாக, எனது குடும்பத்தினரை, அவமானப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நாடு என்றுமே அகங்காரத்தை மன்னித்து கிடையாது. வரலாறு இதை நிரூபித்து உள்ளது. மகாபாரதமும் இதற்கான ஒரு சான்றுதான்.
துரியோதனனுக்கும் இது போன்ற அகங்காரம் இருந்தது. கடவுளான கிருஷ்ண பரமாத்மாவே, துரியோதனனின் முன்னால் சென்று நின்று, உண்மை நிலையை எடுத்துச் சொல்லி, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட, துரியோதனன், அந்த கிருஷ்ணரையே சிறைபிடிக்கத்தான் விரும்பினார்.
'கிருஷ்ணரின் எச்சரிக்கை' என்ற கவிதையில், ஒருவரின் அழிவு காலத்திற்கு முன்பாக, அவனது அறிவாற்றல், அழிந்து போய்விடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது இப்போதைய சூழ்நிலைக்கு நன்கு பொருந்தும். இவ்வாறு பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.
இதனிடையே மேற்கு வங்க மாநிலத்தில், இன்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாஜக தலைவர், அமித் ஷா, பிரியங்கா காந்திக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடியை பிரியங்கா காந்தி துரியோதனனுடன் ஒப்பிட்டுள்ளார். பிரியங்கா அவர்களே.. இது ஜனநாயக நாடு. நீங்கள் ஒருவரை துரியோதனன் என்று சொல்லி விட்டதாலேயே யாரும் துரியோதனனாக மாறிவிட முடியாது. வரும் 23ஆம் தேதி இந்த நாடு யார் துரியோதனன், யார் அர்ஜுனன் என்பதை தீர்மானிக்கப் போகிறது, என்று தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த மாதம் இதே போன்று, பிரதமர் நரேந்திரமோடியை துரியோதனனுடன் ஒப்பிட்டார். அதேபோன்று அமித்ஷாவை, துரியோதனனின் சகோதரர் துச்சாதனனுடன் ஒப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.