நுபுர் சர்மாவை ஏன் கைது செய்யலை? சிவப்பு கம்பள மரியாதை கொடுத்ததா போலீஸ்?உச்சநீதிமன்றம் விளாசல்
டெல்லி: நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய விவகாரத்தில் பாஜக மாஜி நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு பேச்சுரிமை இருக்கிறது என்கிற அவரது வாதத்தை கடுமையாக நிராகரித்தது உச்சநீதிமன்றம். அத்துடன் ஜனநாயகத்தில் புல் வளரவும் உரிமை இருக்கிறது; அதே புல்லை கழுதை மேயக் கூடவும்தான் உரிமை இருக்கிறது; நுபுர் சர்மாவை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என கொந்தளிப்பை காட்டினர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
நபிகள் நாயகத்தை டிவி விவாதம் ஒன்றில் அவதூறாக விமர்சித்திருந்தார் நுபுர் சர்மா. அவரது இந்த பேச்சால் நாடு முழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன. பல்வேறு நாடுகளும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தன. ஆனால் நுபுர் சர்மா மீது வழக்கு மட்டும் போடப்பட்டது. அவர் கைது செய்யப்படவில்லை. பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நபிகள் விவகாரம்-பாஜக மாஜி நிர்வாகி நுபுர் சர்மாவால் நாடு எரிகிறது- மன்னிப்பு கேளுங்க- உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றத்தில்
மேலும் நுபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்த ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் டெய்லர், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் தம் உயிருக்கு ஆபத்து உள்ளது; தம் மீதான வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் போனார் நுபுர் சர்மா. ஆனால் உச்சநீதிமன்றமோ நுபுர் சர்மாவின் கோரிக்கையை நிராகரித்ததுடன் அவரை மிக கடுமையாகவும் விமர்சித்தது.
மன்னிப்பு கேளுங்க
நுபுர் சர்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள்: நுபுர் சர்மாவின் பொறுப்பற்ற பேச்சால் இந்த தேசம் பற்றி எரிகிறது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் படுகொலைக்கு நுபுர் சர்மாதான் காரணம். நுபுர் சர்மா நாட்டு மக்களிடம் டிவியில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
வெட்க கேடானது
நுபுர் சர்மா தம்முடைய கருத்துகளை வாபஸ் பெற்றது என்பது காலம்தாழ்த்திய செயல். நுபுர் சர்மாவும் அவரது வழக்கறிஞர்களும் நடந்து கொள்கிற விதம் மிகவும் வெட்கக் கேடானது. நுபுர் சர்மா தமது உயிருக்கு ஆபத்து என்கிறார். அவரால்தான் இந்த ஒட்டுமொத்த நாட்டுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. நுபுர் சர்மா போன்றவர்கள் ஒருவித செயல்திட்டத்துக்காகவே பேசுகின்றனர். இப்படி பேசுவதன் மூலம் விளம்பரம் தேடுகின்றனர்.
கைது செய்யலை ஏன்?
நுபுர் சர்மா மீது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவே? நுபுர் சர்மாவை ஏன் டெல்லி போலீசார் கைது செய்யவில்லை? விசாரணைக்குப் போன நுபுர் சர்மாவுக்கு சிவப்பு கம்பள மரியாதை கிடைத்ததா? அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எப்படி சரியாகும்?
கழுதை புல்லை மேயவும் உரிமை இருக்கு
இதுஜனநாயக நாடுதான்.. இங்கே பேச்சுரிமையும் இருக்கு.. புல் வளர்வதற்கும் உரிமை இருக்கு.. அதே புல்லை கழுதை மேய்வதற்கும் கூட உரிமை இருக்கிறது. தாம் பேசியதால் ஏற்படும் எதிர்விளைவுகளை கொஞ்சமும் யோசிக்காமல் பேசியிருக்கிறார் நுபுர் சர்மா. ஆகையால் அனைத்து வழக்குகளையும் டெல்லி மாற்ற கோரும் நுபுர் சர்மா மனு நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.