குடியரசுத் தலைவரை சந்திக்க பேரணி சென்ற ஜேஎன்யூ மாணவர்கள்.. போலீஸ் லத்தி சார்ஜ்.. பெரும் பரபரப்பு!
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்திக்க பேரணி சென்ற ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது டெல்லி போலீசார் மிக மோசமாக தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
டெல்லி: குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்திக்க பேரணி சென்ற ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது டெல்லி போலீசார் மிக மோசமாக தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
சரியாக 6 வாரங்களுக்கு முன்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்களுக்கு கட்டணம் 300% கூடுதலாக உயர்த்தப்பட்டது. உணவு, அறைகளுக்கு தனி கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல் தண்ணீர் மற்றும் விடுதி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கு எதிராக ஜேஎன்யூ மாணவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். 42 நாட்களை கடந்து விடுதி கட்டண உயர்விற்கு எதிராக டெல்லியில் ஜேஎன்யூ மாணவர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். மாணவர்கள் போராட்டம் தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது.
ஆனால் அவர்களின் கோரிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் இன்னும் ஏற்கவில்லை. கடந்த இரண்டு வாரம் முன்புதான் அந்த மாணவர்கள் எல்லோரும் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினார்கள்.
ஆனால் ஜே.என்.யூ. மாணவர்கள் போலீசார் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதே சமயம் கல்லூரி நிர்வாகமோ, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகமோ இவர்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. ஜேஎன்யூவில் படிக்கும் 80% மாணவர்கள் மிகவும் வறுமையான பின்னணியை கொண்டவர்கள். பலர் சாதி ரீதியாக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள். பெரும்பாலானவர்கள் சிறுபான்மையினர்.
Delhi: Police resorted to lathicharge after a clash with protesting Jawaharlal Nehru University (JNU) students, who were marching towards Rashtrapati Bhawan to meet President over fee hike issue. pic.twitter.com/H0iPeFWKnw
— ANI (@ANI) December 9, 2019
இதனால் அவர்கள் கட்டண உயர்வை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவரை சந்திக்க பேரணி சென்ற ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது டெல்லி போலீசார் மிக மோசமாக தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
டெல்லியில் மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து நடைபயணமாக பேரணி சென்றார்கள். அவர்கள் குடியரசுத் தலைவரின் வீடு நோக்கி பேரணி சென்றார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டனர். போலீஸ் அவர்கள் மீது கடுமையாக லத்தி மூலம் தாக்குதல் நடத்தியது.
இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அமைதியாக சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தவறு என்று போலீசாருக்கு எதிராக பலர் குரல் கொடுத்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது .
டெல்லி மாநில அரசு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது. இருப்பினும் டெல்லியின் போலீஸ் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்கள் மாணவர்கள் மீது கடும் தடியடி நடத்தி உள்ளனர்.