விஸ்வரூபமெடுக்கும் ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்.. இன்று பெரிய திட்டம்.. டெல்லியில் போலீஸ் குவிப்பு!
டெல்லியில் முக்கிய இடங்களில் இன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
Recommended Video
டெல்லி: டெல்லியில் முக்கிய இடங்களில் இன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் டெல்லியில் பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்களுக்கு புதிய விதிகளை பிறப்பிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளது.
இதில்தான் விடுதி மாணவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. மொத்தம் 300% கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல் விடுதியில் மாணவர்கள் என்ன உடை உடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
போராட்டம் செய்து வருகிறது
இதற்கு எதிராக ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வந்தனர். முதலில் கல்லூரிக்கு உள்ளே போராட்டம் செய்தனர். அங்கு பட்டமளிப்பு விழா நடக்கும் போதும் ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
என்ன கோரிக்கை
நாங்கள் வறுமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். எங்களால் இவ்வளவு கட்டணம் கொடுக்க முடியாது. எங்களிடம் ஆலோசிக்காமல் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். எங்களிடம் ஆலோசிக்காமல் புதிய விதிகளை கொண்டு வந்துள்ளனர் , இதை திரும்ப பெற வேண்டும் என்று மாணவர்கள் போராடி வருகிறார்கள்.
ஏற்கவில்லை
ஆனால் கல்லூரி நிர்வாகமோ, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகமோ இதை ஏற்கவில்லை. கட்டண உயர்வில் பாதியை திருப்ப பெறுகிறோம். முழுதாக கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது என்று கூறிவிட்டனர். இதற்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நேற்று பெரிய போராட்டம்
இந்த போராட்டம் நேற்று பெரிதானது. நேற்று மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினார்கள். ஆனால் ஜே.என்.யூ. மாணவர்கள் போலீசார் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் நாடாளுமன்றம் செல்லும் பாதையில் பெரிய போராட்டம் மற்றும் கலவரம் நடந்தது.
மீண்டும் இன்று போராட்டம்
பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் இன்று மீண்டும் மாணவர்கள் போராட்டம் செய்ய இருக்கிறார்கள். டெல்லியில் உள்ள மற்ற பல்கலைக்கழக மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். டெல்லியின் முக்கிய நகரங்களில் இன்று போராட்டங்கள் நடக்க உள்ளது.
அதிக பாதுகாப்பு
இதனால் டெல்லியில் பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் அதிக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொது இடங்களில் மாணவர்கள் மொத்தமாக கூட கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.