சாப்பிட கூட காசு இல்லை.. படிக்கத்தான் போராடுகிறோம்.. ஜேஎன்யூ போராட்டமும், பின்னணியும்!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த மூன்று வாரமாக தங்கள் உரிமைக்காகவும், கட்டண உயர்விற்கு எதிராகவும் போராடி வருகிறார்கள்.
Recommended Video
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த மூன்று வாரமாக தங்கள் உரிமைக்காகவும், கட்டண உயர்விற்கு எதிராகவும் போராடி வருகிறார்கள்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், இந்தியா முழுக்க பல மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். சில வாரங்கள் முன் பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தொடங்கி தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை இங்குதான் படித்தார்கள்.
பல அறிவு ஜீவிகளை, கம்யூனிஸ்ட் அரசியல் தலைவர்களை ஜேஎன்யூ உருவாக்கி இருக்கிறது. ஷேலா ரஷீத், உமர் காலித், கன்னையா குமார் என்று அடுத்தகட்ட தலைவர்களும் ஜேஎன்யூவில் இருந்து உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
எப்படி இருந்தது
ஜேஎன்யூ பிரச்னையை பற்றி தெரிந்து கொள்ளும் முன் அந்த கல்லூரி பற்றி மூன்று விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். முதல் விஷயம், ஜேஎன்யூவில் படிக்கும் 80% மாணவர்கள் மிகவும் வறுமையான பின்னணியை கொண்டவர்கள். பலர் சாதி ரீதியாக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள். பெரும்பாலானவர்கள் சிறுபான்மையினர்.
இன்னொரு பக்கம்
அதேபோல் இவர்கள் எல்லோரும் ஜேஎன்யுவை நம்பித்தான் இருக்கிறார்கள். கடினமான நுழைவு தேர்வை எழுதி, தங்கள் அறிவு மூலமும், திறமை மூலமும் அவர்கள் ஜேஎன்யூவின் வாசலை எட்டி இருக்கிறார்கள். பல ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லோரும் அரசியல்
அதேபோல் ஜேஎன்யூவில் இரண்டு விதமான அரசியல் குழுக்கள் மெஜாரிட்டியாக இருக்கிறது. இடதுசாரி குழுக்கள், வலதுசாரி குழுக்கள். இவர்கள் இடையே கடுமையான சண்டைகள் வந்துள்ளது. ஜேஎன்யூ வரலாற்றில் அதிக முறை இடதுசாரி சங்கத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட் மாணவர்கள்தன் தேர்தலில் வென்றுள்ளனர். தற்போது அங்கு மாணவ சங்க தலைவரும் இடதுசாரி கூட்டணியை சேர்ந்தவர்தான்.
மூன்றாவது விஷயம்
மூன்றாவது விஷயம், மாணவர்கள் இடையே ஜேஎன்யுவில் அரசியல் விழிப்புணர்வு இருப்பதால், இங்கு ஒடுக்குமுறைகளை அவ்வளவு எளிதாக செய்ய முடியாது. சிறிய பிரச்சனை என்றாலும் இங்கு மாணவர்கள் போராட்டம் செய்ய தொடங்கி விடுவார்கள். ஐஐடியில் செய்யப்படுவது போல ஒடுக்குமுறைகள் ஜேஎன்யூவில் செய்ய முடியாது.
செய்யப்பட்டது
இதற்கு முன் ஜேஎன்யூவிலும் ஒடுக்குமுறைகள் செய்யப்பட்டுள்ளது. ரோஹித் வெமுலா போன்ற மாணவர்கள் இதனால் தற்கொலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் சமீப காலங்களில் மாணவர்கள் மிகவும் விழிப்புணர்வாக ஜேஎன்யூவில் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்டு வருகிறார்கள்.
இப்போது என்ன
சரி இப்போது என்ன பிரச்சனை என்று கேட்கலாம். நான்கு வாரம் முன் ஜேஎன்யூவில் நடந்த அலுவலக ஆலோசனை ஒன்றுதான் இப்போது நடக்கும் போராட்டத்திற்கு காரணம். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் விடுதி மாணவர்களுக்கு புதிய விதிகளை பிறப்பிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளது. புதிய கடுமையான விதிகள் சில விதிக்கும் பொருட்டு இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.
கட்டணம் உயர்வு
இதில்தான் விடுதி மாணவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல் விடுதியில் மாணவர்கள் என்ன உடை உடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இந்த ஆலோசனை கூட்டம் குறித்து அங்குள்ள மாணவ சங்கத்திற்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மாணவர்களுக்கு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
எவ்வளவு உயர்வு
அங்கு விடுதி மாணவர்களுக்கு கட்டணம் 300% உயர்த்தப்பட்டது. உணவு, அறைகளுக்கு தனி கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல் தண்ணீர் மற்றும் விடுதி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட முடிவு எடுக்கப்பட்டது. இதுதான் தற்போது ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம் நடத்த காரணம்.
இன்னொரு காரணம்
அதேபோல் ஜேஎன்யூ மாணவர்கள் தங்கள் துணை வேந்தர் மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். துணை வேந்தர் மாணவர்களுக்கு எதிராக செயல்படுகிறார். எங்களுக்கு இப்போது இந்த போராட்ட களத்திற்கு துணை வேந்தர் வர வேண்டும். துணை வேந்தர் வேந்தர் ஜெகதீஷ் குமார் இங்கு வந்து எங்களிடம் பேச வேண்டும்.
திருடிவிட்டார்
எங்களிடம் அபராதம் என்று கூறி அவர் பொய் கணக்கு காட்டுகிறார். அவர் மாணவர்களின் பணத்தை திருடுகிறார். ஆம் மாணவர்கள் அபராத கட்டணமாக கொடுக்கும் பணத்தை அவர் கொள்ளையடிக்கிறார். மத ரீதியாக, ஜாதி ரீதியாக மாணவர்களிடம் பாகுபாடு காட்டுகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த இரண்டு தான் காரணம்
ஆகவே டெல்லியில் ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம் கட்டண உயர்வு மற்றும் துணை வேந்தரின் செயல்பாடு இரண்டின் காரணமாக என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்த போராட்டம் நேற்று பெரிதானது. நேற்று மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினார்கள்.
என்ன இல்லை
ஆனால் ஜேஎன்யூ மாணவர்கள் போலீசார் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் நாடாளுமன்றம் செல்லும் பாதையில் பெரிய போராட்டம் மற்றும் கலவரம் நடந்தது. அதே சமயம் கல்லூரி நிர்வாகமோ, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகமோ இவர்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. கட்டண உயர்வில் பாதியை திரும்ப பெறுகிறோம் என்று கூறி உள்ளது.
வறுமை எப்படி
ஆனால் மாணவர்கள், நாங்கள் வறுமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். 3000 கோடிக்கு சிலை வைக்கும் போது ஏன் மாணவர்கள் படிப்பிற்கு செலவு செய்ய முடியாதா? நாங்கள் படிக்கத்தான் போராடுகிறோம் என்று கூறி வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளத்தில் மாணவர்களின் போராட்டத்திற்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்துள்ளது.