குடியரசுத் தின கொண்டாட்டத்திற்கு சிறு பாதிப்பும் ஏற்படாது... அமைதியான முறையில் பேரணி -விவசாயிகள்
டெல்லி: ஜனவரி 26-ம் தேதியன்று அமைதியான முறையில் மட்டுமே டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாங்கள் நடத்தும் டிராக்டர் பேரணியால் குடியரசுத் தினக் கொண்டாட்டத்திற்கு சிறு பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதியை அவர்கள் கொடுத்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெறக் கோரி தலைநகர் டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், புதிய விவசாய சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தது.
மேலும், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவையும் நியமித்தது. இந்நிலையில் அந்தக் குழுவில் இருந்து பூபேந்தர் சிங் மான் விலகிக் கொண்டார்.
இதனிடையே வரும் ஜனவரி 26-ம் தேதி தலைநகர் டெல்லியில் அமைதியான முறையில் மட்டுமே டிராக்டர் பேரணி நடத்துவோம் என்றும் டிராக்டர்களில் தேசியக் கொடியை பறக்கவிட்டு இந்த பேரணியை நடத்தவுள்ளதாகவும் விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தங்கள் பேரணி மூலம் குடியரசுத் தினக் கொண்டாட்டத்துக்கு சிறு பாதிப்பு கூட ஏற்படாது எனவும் அவர்கள் உறுதி தந்துள்ளனர்.
குடியரசு தினத்தில் விவசாயிகளின் 1 லட்சம் டிராக்டர் பேரணி- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் இதனைக் கூறியுள்ளனர். மேலும், 2024-ம் ஆண்டு மே மாதம் அதாவது மத்திய அரசின் ஆட்சிக்காலம் முடியும் வரை போராட்டத்தை தொடரவும் தாங்கள் தயாராக உள்ளதாக அதிர்ச்சி அளித்திருக்கின்றனர்.
இதனால் புதிய வேளாண் சட்ட விவகாரத்தை மத்திய அரசு மிகுந்த கவனமுடன் கையாண்டு வருகிறது. சுமூகமான முறையில் தீர்வு எட்டவேண்டி அதற்கான நடவடிக்கைகளை சளைக்காமல் மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு.