முன்கூட்டியே கிளம்பிய டிராக்டர்கள்.. தடுப்புகளை தகர்த்த விவசாயிகள்.. டெல்லி எல்லையில் பதற்றம்
டெல்லி: டெல்லி எல்லையில் முன்கூட்டியே விவசாயிகள் பேரணியை துவங்கியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் குடியரசு தின நாளில் டிராக்டர் பேரணி நடத்தி 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்த பேரணிக்கு, டெல்லி போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கட்டுப்பாடுகள்
எனினும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிங்கு, திக்ரி, காஜிபூர் எல்லைப் பகுதிகளில் இருந்து குறிப்பிட்ட தொலைவு மட்டுமே டிராக்டர் பேரணி நடத்த வேண்டும். திக்ரி எல்லையில் இருந்து 63 கி.மீ., சிங்கு எல்லையில் இருந்து 62 கி.மீ., காஜிபூர் எல்லையில் இருந்து 46 கி.மீ. தொலைவுக்கு பேரணி நடத்தலாம். பேரணியில் 5 ஆயிரம் டிராக்டர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஒரு டிராக்டரில் 3 பேர் முதல் 5 பேர் வரை மட்டுமே இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 37 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
#WATCH Protesting farmers break police barricading at Delhi-Haryana Tikri border
— ANI (@ANI) January 26, 2021
Farmers are holding tractor rally today in protest against Centre's three Farm Laws#RepublicDay pic.twitter.com/3tI7uKSSRM
போலீசார் தடுக்க முயற்சி
இந்த நிலையில், இன்று காலை 8.30 மணி அளவில் திக்ரி எல்லை பகுதியிலிருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியை தொடங்கினர். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன் கூட்டியே விவசாயிகள் பேரணி தொடங்கியதால், போலீசார் அவர்களை தடுக்க முற்பட்டனர்.
தடுப்பு தகர்ப்பு
ஆனால் தடுப்புகளை தகர்த்துக்கொண்டு விவசாயிகளில் சிலர் டிராக்டர்களில் முன்னேறியதால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படும் நிலை உருவானது. காவல்துறையினர் மறுபடியும் தடுப்புகளை போட்டு விவசாயிகள் முன்னேற விடாமல் தடுத்து வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம்
காலை 11 மணிக்கு மேல் பேரணி நடத்திக்கொள்ள டெல்லி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு விவசாய அமைப்பினரும் சம்மதம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில்தான் திடீரென தடுப்பு மருந்து அகற்றப்பட்டு காலையிலேயே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.