அதிரும் தலைநகர்.. குடியரசு தின டிராக்டர் பேரணி... காவல் துறையினரை சந்திக்கும் விவசாயிகள்
டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிராகக் குடியரசு தினத்தன்று திட்டமிடப்பட்டுள்ள டிரக்டர் பேரணியின் ஏற்பாடுகள் மற்றும் பாதை குறித்து இன்று காவல் துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் மூன்று புதிய விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இச்சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, அப்போது முதலே இச்சட்டங்களுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாகப் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தலைநகரை முற்றுகையிட்டுக் கடந்த 56 நாட்களாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
விவசாயிகளின் டிராக்டர் பேரணி- தடை விதிக்க கோரிய மத்திய அரசு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
பேச்சுவார்த்தையில் இழுபறி
விவசாய சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை ஒன்பது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதில் இலவச மின்சாரம், விவசாய கழிவுகளை எரிப்பதற்கான அபராதம் உள்ளிட்ட விஷயங்களில் மட்டுமே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இச்சட்டங்களிலுள்ள ஒவ்வொரு உட்பிரிவு குறித்தும் விவாதிக்கத் தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளது. இருப்பினும், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது மட்டுமே ஒரே தீர்வு என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
டிராக்டர் பேரணி
வரும் குடியரசு தினத்திற்குள் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறவில்லை என்றால் தலைநகரை டெல்லியை முற்றுகையிட்டு மிகப் பெரிய டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்தனர். இந்த டிராக்டர் பேரணிக்குத் தடை விதிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், டிரக்டர் பேரணிக்குத் தடை விதிக்க மறுத்து உச்ச நீதிமன்றம், டிரக்டர் பேரணியை அனுமதிப்பது தொடர்பான முடிவை மத்திய அரசும் டெல்லி காவல் துறையும் எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.
ஆலோசனைக் கூட்டம்
இந்தச் சூழ்நிலையில், குடியரசு தினத்தன்று திட்டமிடப்பட்டுள்ள டிரக்டர் பேரணி நடைபெறும் பாதை மற்றும் ஏற்பாடுகள் குறித்து இன்று காவல் துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். டெல்லி காவல் துறை சார்பில் கூடுதல் கமிஷனர் எஸ்.எஸ்.யாதவ் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச காவல் துறையினரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்
பல்பீர் சிங் ராஜேவால் உள்ளிட்ட விவசாயச் சங்கத் தலைவர்கள் ஒரு பிரிவினர் காவல் துறையினருடனான இந்த ஆலோசனையில் கலந்துகொள்ள உள்ளனர். டிராக்டர் பேரணிக்கான ஏற்பாடுகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட விவசாயிகள், ரிங் ரோட்டில் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் இதைத் தடுப்பதற்குப் பதிலாக காவல்துறையினர் தேவையான ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
10ஆம் கட்ட பேச்சுவார்த்தை
இந்த இக்கட்டான சூழ்நிலையில், மறுபுறம் விவசாயச் சங்கத் தலைவர்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மதியம் நடைபெறுகிறது. இதில் போராடும் அனைத்து 40 விவசாயச் சங்க பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட மூன்று மத்திய அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். மத்திய அரசு மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற ஒப்புக்கொண்டால் குடியரசு தினத்தில் திட்டமிடப்பட்டுள்ள டிராக்டர் பேரணி கைவிடப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.