'கண்டா வரச் சொல்லுங்க'- தேர்தல் ஆணையத்தின் 7 நாள் போதும் அறிவிப்பு 'சூப்பர் ஸ்டார்' முடிவை மாற்றுமா?
டெல்லி: புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான பொது அறிவிப்பு காலம் 30 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைக்கப்படுவதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒருவர் அரசியல் கட்சி தொடங்க வேண்டுமென்றால், அவர் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழி என இரண்டு நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும். அதுதொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் அதை பரிசீலித்து, பொதுவெளியில் அறிவிப்பார்கள். அதற்கு யார் வேண்டுமானாலும் ஆட்சேபனை தெரிவிக்கலாம். இதற்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
5 மாநிலங்களில் மட்டும்
தற்போது, இந்த 30 நாட்களைத் தான் தேர்தல் ஆணையம் 7 நாட்களாக குறைத்துள்ளது. தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு மட்டுமே இது புது உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் முடிவு
இந்த உத்தரவின் மூலம், 'இந்த தேர்தலில் வேண்டாம், அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம்' என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, அரசியலே வேண்டாம் என்ற முடிவில் அழுத்தம் திருத்தமாக இருக்கும் ரஜினியின் முடிவில் அதிர்வை ஏற்படுத்தக் கூட வாய்ப்புள்ளது.
ஏமாந்த ரஜினி
ஏனெனில், கொரோனா வரவில்லை என்றால், ரஜினி இந்நேரம் கட்சி தொடங்கி, வேட்பாளர்களை கூட அறிவித்திருக்க வாய்ப்புண்டு. அந்த அளவுக்கு ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்பதில், ரஜினி தெளிவாகவும், முனைப்போடும் இருந்தார். கொரோனா வந்த போது கூட, இப்போது நிலைமை சரியாகிவிடும். நாளை சரியாகிவிடும் என்று நினைத்தவருக்கு, ஒரு வருட காலம் எந்த பயனும் இல்லாமல் கழிந்தது தான் மிச்சம்.
உடல்நிலை பாதிப்பு
சரி, இனிமேலாவது களமாடலாம் என்று நினைத்து, கட்சி நிர்வாகிகளை அறிவித்து, 'அண்ணாத்த' ஷூட்டிங் கிளம்பியவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட, பதறியடித்து மருத்துவமனையில் அட்மிட் ஆகும் சூழல் ஏற்பட்டது. மருத்துவர்களோ, 'ரிஸ்க் வேண்டாம் சூப்பர் ஸ்டார்' என்று பீதியை அதிகப்படுத்த, 'என்னால் அரசியலுக்கு வர முடியவில்லை' என்று தடாலடியாக அறிவித்து கேலி, கிண்டலுக்கு ஆளானார். அவரது பின்வாங்கல் அறிவிப்பு, ரஜினி ரசிகர்களின் இதயத்தில் ஈட்டியை பாய்த்ததோ இல்லையோ, எதிர் தரப்பினரில் நேற்று பிறந்த குழந்தை தொடங்கி, வகை வகையாக ரஜினியை விமர்சித்தது ரசிகர்கள் இதயத்தில் ரத்தத்தையே வர வைத்தது.
மீண்டும் வீசுமா?
இப்போது, ரஜினி புயல் சற்று அடங்கி, போயஸ் கார்டன் தென்றலில் இளைப்பாற்றிக் கொண்டிருக்கிறது. மீண்டும் 'அண்ணாத்த' ஷூட்டிங் கிளம்பவும் ஆயத்தமாகி வருகிறது. இந்நேரம் அவர் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும் என்று சத்தியமாக எவராலும் கணிக்க முடியாது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் இந்த 7 நாள் அறிவிப்பு, ரஜினியின் காதுகளுக்கும் நிச்சயம் எட்டும். அவரது எண்ணம் எட்டுத்திக்கும் பாய்ந்து என்ன வேண்டுமானாலும் யோசிக்கலாம். ஏனெனில், இப்போது கூட, அவர் ஒற்றை கண் அசைத்தால், இறங்கி வேலை செய்ய அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
யார் கண்டா, ரஜினியிடம் இருந்து தித்திப்பாக ஏதேனும் அறிக்கை கூட அவரது ரசிகர்களுக்காக வெளிவரலாம்! பார்ப்போம்!.