குற்றப்பின்னணியை விளம்பரப்படுத்த வேண்டும்.. வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வைத்த செக்!
டெல்லி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்த பின்னர் மூன்று முறை தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் தங்களது குற்றப்பிண்ணனி குறித்து விளம்பரப்படுத்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது தங்களது குற்றப்பின்னணி குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக புதிய வழிகாட்டுதல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஒத்துழைப்பு கொடுங்க.. சீக்கிரமே இயல்பு நிலை திரும்பிடும்.. 89% பேர் குணமாகிவிட்டார்கள்.. முதல்வர்
தார்மீக அளவுகோல்
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற பின்னணியை, வேட்பாளர்களை பரிந்துரைக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் விளம்பரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தேர்தல் ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக இந்த தார்மீக அளவுகோலுக்கு தேர்தல் ஆணையம் எப்போதும் வலியுறுத்துகிறது.
மாற்றியமைக்கப்பட்ட வழிமுறைகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
காலக்கெடு
விளம்பரத்திற்கான திருத்தப்பட்ட காலக்கெடு
திருத்தப்பட்ட வழிகாட்டுதலின் படி, வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும், அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் தொடர்பாக, குற்றப்பின்னணி விவரங்கள் ஏதேனும் இருந்தால், செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பின்வரும் முறையில் வெளியிட வேண்டும்.
(i) முதல் விளம்பரம்: வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட கடைசி 4 நாட்களுக்குள்.
(ii) இரண்டாவது விளம்பரம்: வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட கடைசி தேதியிலிருந்து 5 முதல் 8 வது நாளுக்குள்
(iii) மூன்றாவது விளம்பரம்: 9 வது நாள் முதல் பிரச்சாரத்தின் கடைசி நாள் வரை, அதாவது வாக்கெடுப்பு தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு.
இந்த காலக்கட்டங்களில் வாக்காளர்களுக்கு வேட்பாளர்களை பற்றி அதிக தகவல்களை அறியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.
கட்டாயம் விளம்பரம்
ஒருவேளை போட்டியே இல்லாமல் வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் அவர்களை பரிந்துரைக்கும் அரசியல் கட்சிகளும், வெற்றி பெற்ற வேட்பாளர்களும் குற்றப்பின்னணியை மக்களுக்கு தெரிந்து கொள்ளும் வகையில் அப்போதும் விளம்பரப்படுத்த வேண்டும்.
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தபடி, இதுவரை வழங்கப்பட்ட அனைத்து அறிவுறுத்தல்களும் மக்களின் நலனுக்காக வெளியிடப்படுகிறது. இது வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும். இந்த மாற்றியமைக்கப்பட்ட வழிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.