புதுச்சேரியில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்கப்போகிறது பாஜக கூட்டணி.. அடித்து சொல்கிறது ஏபிபி சர்வே!
டெல்லி: புதுச்சேரியில் முதல் முறையாக பாஜக கூட்டணி, ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக ஏபிபி சி வோட்டர் சர்வே கூறுகிறது.
ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் அதே நாளில், புதுச்சேரியிலும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பாஜக கூட்டணி அங்கு 17 முதல் 21 இடங்களை வெல்லும், காங்கிரஸ் கூட்டணி 8 முதல் 12 தொகுதிகளை வெல்லும் என்று ஏபிபி சி வோட்டர் சர்வே கூறுகிறது. அங்கு மொத்த இடங்கள் 30 ஆகும்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 154-162 இடங்களில் ஜெயிக்க வாய்ப்பு - ஏபிபி கருத்துக்கணிப்பு
நாராயணசாமி அரசு
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் அடுத்தடுத்து ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணியில் இருந்து திமுக எம்எல்ஏ ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாததால் அரசு கவிழ்ந்தது.
துணை நிலை ஆளுநர்
தற்போது அங்கு துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டுள்ளார். பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருள் மீது வரி குறைப்பு உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை அவர் எடுக்கத் துவங்கி உள்ளார்.
நமச்சிவாயம்
மேலும் நாராயணசாமி அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
அவர் பாஜகவில் சேர்ந்த நிலையில் பாஜக முதல்வர் வேட்பாளராக நமச்சிவாயம் முன்மொழிய படுவார் என்று தெரிகிறது. அவரது செல்வாக்கு மற்றும் குடியரசுத் தலைவர் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் நலத்திட்டங்களையும் முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்து புதுச்சேரியை முதல்முறையாக பாஜக பிடிக்கலாம் என்று திட்டமிட்டு உள்ளது.
முதல் முறை பாஜக
தற்போது ஏபிபி நியூஸ் சர்வே அதை பிரதிபலிப்பது போல அமைந்துள்ளது. புதுச்சேரி எப்போதுமே திராவிட கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கோட்டையாக இருந்து வந்துள்ளது முதல் முறையாக பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று ஒரு கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.