எல்லையில் இந்திய ராணுவம் ருத்ர தாண்டவம்.. 12 மணி நேரம் தொடர் தாக்குதல்.. தீவிரவாத தளபதி சுட்டுக்கொலை
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில், புல்வாமா தாக்குதலின் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி கம்ரான் சுட்டுக் கொல்லப்பட்டான்.
சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பொறுப்பேற்ற, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் ஆசாருக்கு நெருக்கமானவன், கம்ரான் என்பதால், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையில் இது முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
காஷ்மீரிலுள்ள இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து தங்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பது மற்றும் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவன் கம்ரான்.
இரு முக்கிய தீவிரவாதிகள்
பாதுகாப்பு படையினர் கடந்த 12 மணி நேரமாக எல்லையில் நடத்திய தேடுதல் வேட்டை மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் கம்ரான் கொல்லப்பட்டதோடு அவனது கூட்டாளியான மற்றொரு தீவிரவாதி காஜி ரஷீத் என்பவனும் கொல்லப்பட்டான். காஜி ரஷீத், ஆப்கன் நாட்டைச் சேர்ந்தவனாகும். ஐஇடி வெடிகுண்டுகளை தயாரிப்பதில் இவன் பெயர்பெற்றவன்.
ராணுவ வீரர்கள்
இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தின் 4 வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். பொது மக்களில் ஒருவரும் பலியாகியுள்ளார். துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற பகுதி என்பது, பிப்ரவரி 14ம் தேதி சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது தீவிரவாதி தற்கொலைத்தாக்குதல் நடத்திய இடத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலுள்ள ஏரியாவாகும்.
தேடுதல் வேட்டை
கம்ரானை கடந்த பல ஆண்டுகளாகவே ராணுவம் தேடி வந்தது. ஆனால், கிராமம் கிராமமாக இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு இளைஞர்களை தீவிரவாதிகள் பக்கம் இழுக்கும் வேலையில் கம்ரான் ஈடுபட்டு வந்ததால், பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான், இப்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.
12 மணி நேரம் ஆவேசம்
இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து 12 மணி நேரங்களாக காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அதிரடி வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான், தொடர்ந்து 4வது நாளாக, ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமலில் நீடித்து வருகிறது.