பின்லேடனை அமெரிக்கா அழித்தது போல்... பாக். தீவிரவாதிகளை கொல்ல வேண்டும்... பாபா ராம்தேவ் ஆவேசம்
டெல்லி: பயங்கரவாதி பின்லேடனை அமெரிக்கா கொலை செய்த பாணியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்க வேண்டும் என்று யோகா குரு பாபா ராம் தேவ் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டன முழக்கங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன. சிறுவர், சிறுமிகள் மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தீவிரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பாடம் கற்பிக்க வேண்டும் என்று போராட்டக் குரல் எழுந்துள்ளது. வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களில் ராணுவ மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்தநிலையில், நொய்டாவில் பேசிய யோகா குரு ராம்தேவ், காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதல் இந்திய ஒருமைப்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று கூறியுள்ளார். இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ள தீவிரவாதிகள், இந்திய எல்லைக்குள் நுழைய உள்ள தீவிரவாதிகளை ராணுவம் உயிரோடு விடக்கூடாது என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தக மையத்தை விமானம் மூலம் தாக்கி விட்டு, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கண்டுபிடித்து ஒழித்தது போல் தீவிரவாதிகள் மசூத் அசார் மற்றும் ஹபீஸ் சயீத்தை இந்தியா கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.