பாகிஸ்தான் செல்லும் சவுதி முடிஇளவரசர்.. இந்தியாவுடன் நிற்கும் ஈரான்.. ஆசிய அரசியலில் திருப்பம்!
மொத்தத்தில் இரண்டு நாடுகளில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் தற்போது உலக அளவிலான பிரச்சனையாக மாறி இருக்கிறது.
டெல்லி: மொத்தத்தில் இரண்டு நாடுகளில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் தற்போது உலக அளவிலான பிரச்சனையாக மாறி இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களை இந்த தீவிரவாத தாக்குதல் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது.
கடந்த புதன் கிழமை ஈரானின் பாகிஸ்தான் எல்லையில் முதல் தீவிரவாத தாக்குதல் நடந்தது. ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள காஷ் என்ற ஈரானின் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
அதற்கு மறுநாள் இந்தியாவில் ஜம்முவின் புல்வாமாவில் அடுத்த தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த இரண்டு தாக்குதல்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்த தாக்குதல் காரணமாக தற்போது சவுதி அரேபியா இந்தியா உறவில் பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
அதேபோல்
ஈரான் தாக்குதலில் மொத்தம் 27 ஈரானை சேர்ந்த இஸ்லாமிக் ரேவலூஷனரி கார்ட்ஸ் வீரர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் அல்-அடில் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று இருக்கிறது. புல்வாமா தாக்குதலில் 40 இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறாரகள். இதற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.
ஏன் ஒன்று
இரண்டு தாக்குதலும் 100% ஒரே மாதிரி நடந்த தாக்குதல் ஆகும். ஈரான் பாகிஸ்தான் எல்லையில் ஈரான் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவிட்டு திரும்பும் நேரத்தில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. அதேபோல் காரில் வெடிகுண்டை சுமந்து கொண்டு வந்த தீவிரவாதி, ராணுவ வீரர்களின் வாகனம் மீது மோதி வெடிகுண்டை வெடிக்க வைத்து உள்ளார். இதுதான் அப்படியே காஷ்மீரில் நடந்தது.
பிரச்சனை என்ன
இந்த இரண்டு தாக்குதலை அடுத்து இந்தியாவிற்கு ஈரான் உதவிக்கரம் நீட்டி இருக்கிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழித்து ஒழிப்பதில் இந்தியாவிற்கு உதவுவதாக ஈரான் தெரிவித்து உள்ளது. இரண்டு நாட்டை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இது தொடர்பாக சந்திப்பு நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
சவுதி
அதே சமயம் இதில் ஈரான் இன்னொரு மாதிரியான எச்சரிக்கையும் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் எந்த அளவிற்கு காரணமோ அதே அளவிற்கு சவுதியும் காரணம் என்று ஈரான் குறிப்பிட்டு இருந்தது. சவுதி சன்னி முஸ்லீம்கள் உள்ள நாடு, ஈரான் ஷியா முஸ்லீம்கள் உள்ள நாடு. இதனால் இரண்டு நாட்டிற்கும் இடையில் பல காலமாக பிரச்சனை இருந்து வருகிறது.
நட்பு நாடுகள்
இந்த நிலையில்தான் பாகிஸ்தானுக்கு சவுதி நாட்டின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் செல்கிறார். இன்று செல்லும் அவர் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்களை செய்ய உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தானுக்கு பலன் அளிக்கும் வகையில் பல ஒப்பந்தங்களை சவுதி செய்து வருகிறது. இதனால் இரண்டு நாடுகளும் நெருங்கிய நட்பு நாடுகள் ஆகி உள்ளது.
இரண்டு அணிகள்
இந்த பிரச்சனை காரணமாக தற்போது ஆசியாவில் இரண்டு முக்கிய அணிகள் எதிர்பாராமல் உருவாகி இருக்கிறது. இந்தியா - ஈரான் மற்றும் பாகிஸ்தான் - சவுதி. ஆசியாவில் உள்ள நான்கு முக்கிய நாடுகள் இப்படி அணிகளாக பிரிந்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிற்கும் சவுதிக்கும் இதுவரை பெரிய பிரச்சனை இருந்தது கிடையாது. ஆனால் முகமது சல்மானின் இந்த பாகிஸ்தான் பயணத்திற்கு பின் அதில் பிரச்சனை ஏற்பட கூட வாய்ப்பு இருக்கிறது.