பரபர குற்றச்சாட்டு.. கோத்ரா சம்பவம் மாதிரி புல்வாமா தாக்குதலிலும் பாஜக சதி.. சொல்வது யார் தெரியுமா?
Recommended Video
டெல்லி: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் போன்று, புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் பாஜகவின் சதி வேலை என்று முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் மனித வெடிகுண்டு தீவிரவாதி, காரில் சென்று, நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள பாலகோட் பகுதிக்கு இந்திய விமானப்படை விமானங்கள் சென்று, தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அரசு அறிவித்தது.
பாலகோட் தாக்குதல் vs ரபேல் புகார்.. வாக்காளர்கள் ஆதரவு மோடிக்கா, ராகுலுக்கா? கள யதார்த்தம் இதுதான்
பாலக்கோட் தாக்குதல்
பாலகோட்டில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரங்களில் பெருமிதம் தெரிவித்து வருகிறார். இளைஞர்கள் தங்கள் முதல் வாக்குகளை பாலகோட், தாக்குதலுக்கு சமர்ப்பணமாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறும் அளவுக்கு இந்த விஷயத்தை தேர்தல் விவகாரமாக கையில் எடுத்துள்ளார் மோடி.
முன்னாள் முதல்வர்
இந்த நிலையில்தான், முன்னாள் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் குஜராத் முதல்வரும், தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில், முக்கிய தலைவர்களில் ஒருவருமாக உள்ள, சங்கர் சிங் வகேலா கூறியுள்ள ஒரு கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய சங்கர் சிங் வகேலா கூறியதை பாருங்கள்: தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தீவிரவாதத்தை பாஜக பயன்படுத்தி வருகிறது.
தீவிரவாதிகள் கொல்லப்படவில்லை
கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள் நாடு முழுக்க நடைபெற்றுள்ளன. ஆனால் அதை எல்லாம் மூடி மறைத்து வருகிறது பாஜக அரசு. பாலகோட் தாக்குதலில் எந்த ஒரு தீவிரவாதியும் கொல்லப்படவில்லை. எந்த ஒரு சர்வதேச விசாரணை அமைப்பும் கூட அங்கு, 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தவில்லை.
திட்டமிட்ட சதி
பாலகோட் விமானப்படை தாக்குதல் என்பது ஒரு திட்டமிட்ட சதி. பாலகோட்டில் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும். புல்வாமாவில் தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை தகவல் வந்த பிறகும் கூட, அரசு, எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் இருப்பதாக உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால், ஏன் முன்கூட்டியே அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? புல்வாமா தாக்குதல் போன்ற ஒரு சம்பவம் நடைபெறும் வரை ஏன் காத்திருந்தீர்கள்?
குஜராத் மாடல்
தேர்தல் வெற்றிக்காக, குழுக்கள் நடுவே, மோதலை ஏற்படுத்துவது பாஜகவின் வாடிக்கையாக இருக்கிறது. பாஜகவின் குஜராத் மாடல் தவறானது. அந்த மாநிலம் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளது. பாஜகவில் உள்ள நிர்வாகிகள் பலரும், தாங்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக கருதுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோத்ரா கலவரம் பின்னணி
2002ம் ஆண்டு, குஜராத் மாநிலம் கோத்ராவில் கரசேவகர்கள் பயணித்த ரயிலில் ஏற்பட்ட தீ சம்பவத்தையடுத்து, அம்மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. இதில் 1000த்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். ரயிலில் எதிர்பாராத விபத்து காரணமாக தீீ பிடித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், முஸ்லீம்கள் மீது குஜராத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.