'கீழ்த்தரமான வேலைக்கு அவர் வெட்கப்பட வேண்டும்' - அர்னாப் மீது புல்வாமா குடும்பத்தினர் கொலைவெறி!
டெல்லி: ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
டிஆர்பி கணக்கீடு குறித்த பிரச்சனையின் தொடர்ச்சியாக, BARC அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்த பார்தோ தாஸ்குப்தா மற்றும் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி ஆகிய இருவரின் வாட்ஸ் அப் உரையாடல் என்பதாக அறியப்படும் சில Chat-கள் சமூக ஊடகங்களில் சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குறிப்பாக, புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம், தமது ரிபப்ளிக் டிவி சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்கு கிடைத்த சரியான வாய்ப்பாக அமைந்ததாக அர்னாப் கூறுவது போல் அந்த சாட் அமைந்திருந்தது.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் இன்னுயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் அர்னாப் கோஸ்வாமியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்ததற்காகவும், கீழ்த்தரமான ஊடகவியலாளராக நடந்து கொள்வதற்காகவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராணுவ ரகசியங்களை அசால்ட்டாக வாட்ஸ் அப்பில் பேசிய அர்னாப் கோஸ்வாமி.. விசாரணை நடத்த காங். வலியுறுத்தல்
டிஆர்பி-காக இதுபோன்ற தனது கேவலமான செயல்பாடுகளை நினைத்து அவர் வெட்கப்பட வேண்டும் என்றும் இனிமேலும் இது தொடரக் கூடாது என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ரிபப்ளிக் சேனலின் தலைமை ஆசிரியராக இருக்கும் அர்னாபிற்கு முக்கியமான தகவல்கள் எல்லாம் எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்து அரசு விசாரணை நடத்தியே தீர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.