ரூ350 கோடி வங்கி மோசடி.. கனடாவுக்கு ஓடிப்போன பஞ்சாப் தொழிலதிபர்- 15 மாதம் கழித்து சிபிஐ-ல் புகார்!
டெல்லி: வங்கிகளில் ரூ350 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு பஞ்சாப் தொழிலதிபர் மஞ்சித் சிங் மக்னி கனடாவுக்கு தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது பஞ்சாப் பாஸ்மதி ரைஸ் லிமிடெட் நிறுவனம். இதன் இயக்குநர் மஞ்சித் சிங் மக்னி.
இந்த நிறுவனத்தில் மஞ்சித் சிங் மக்னியின் மகன் குல்வீந்தர் சிங் மக்னி, மருமகள் ஜஸ்மீத் கவுர் உள்ளிட்டோர் இயக்குநர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கூட்டாக வங்கிகளில் மொத்தம் ரூ350 கோடி கடன் வாங்கி இருந்தனர்.
கனரா வங்கியில் ரூ175 கோடி, ஆந்திரா வங்கியில் ரூ53 கோடி, யூபிஎஸ்-ல் ரூ44 கோடி, ஓபிசியில் ரூ25 கோடி, ஐடிபிஐ-ல் ரூ14 கோடி, யூகோ வங்கியில் ரூ41 கோடி என கடன் வாங்கி இருந்தனர். ஆனால் இந்த கடன்கள் எதனையும் மஞ்சித் சிங் மக்னி குடும்பம் திருப்பிச் செலுத்தவில்லை.
கொரோனாவுக்கு 'ஆப்பு ரெடி' முக்கிய கட்டத்தை எட்டியது தடுப்பூசி.. மனித உடல் சோதனையில் சிறந்த பலன்
இந்த மோசடி தொடர்பாக 2019-ம் ஆண்டே ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் புகார் தெரிவித்தன. ஆனால் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் செய்யுமாறு அப்போது ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.
தற்போது சுமார் 15 மாதங்களுக்கு பின்னர் வங்கிகள் சிபிஐ அதிகாரிகளிடம் இந்த மோசடி குறித்து புகார் தெரிவித்துள்ளனர். வங்கிகள் புகார் தெரிவிக்க ஏன் இத்தனை காலம் தாமதித்தது? என்பது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.