விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா?... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்
டெல்லி: மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்வது குறித்தும், பஞ்சாப் சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது குறித்தும் அவர் மத்திய அமைச்சரிடம் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா உள்பட பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 27-ம் தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியின் முக்கிய நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருவதால் டெல்லி முழுவதும் பதற்றம் நிலவுகிறது. அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
இந்த போராட்டத்தை முடி வுக்கு கொண்டு வருவதற்காக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ,விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராகி வரும் நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்.
பஞ்சாப் சட்டசபையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, அதற்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்பட்டது. மாநில கவர்னர் இதற்கு ஒப்புதல் அளித்தால்தான் இது சட்ட வடிவம் பெரும். ஆனால் மாநில கவர்னர் இதற்கு ஒப்புதல் அளிக்காததால், அமரீந்தர் சிங் இந்த சட்ட மசோதாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்ப தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இது குறித்தும்,, வேளாண் சட்டங்களை ரத்து செய்வது குறித்தும் அவர் அமித்ஷாவுடன் பேசுவார் என முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், சில விவசாய பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு, வேளாண் சட்டத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து மத்திய அமைச்சரிடம் எடுத்து கூற உள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள அனைத்து எல்லைகளையும் முடக்குவோம் என விவசாயிகள் எச்சரித்து உளளதால் இந்த விவகாரத்துக்கு மத்திய அரசு விரைவில் தீர்வு ஏற்படுத்தும் என்று தெரிகிறது.