''உண்மையாக போராடும் விவசாயிகள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும்' - பஞ்சாப் முதல்வர்
டெல்லி: உண்மையாக போராடும் அனைத்து விவசாயிகளும் டெல்லியை விட்டு வெளியேறி மீண்டும் போராட்டக்களத்திற்கு திரும்ப வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதத்திற்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், குடியரசு தினமான இன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி பெற்றிருந்தனர்.
ஆனால், விவசாயிகளின் ஒரு பிரிவினர் என்று கூறப்படும் நபர்கள், தங்கள் டிராக்டர்களை பயன்படுத்தி, தடுப்புகளை இடித்து தள்ளி டெல்லி உள்ளே நுழைந்தனர். இதனால், தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். அதே போல காசிப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
மேலும், தண்ணீர் டாங்கிகளை பயன்படுத்தி தடையை மீறி உள்ளே நுழைந்தவர்களின் டிராக்டர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருந்தபோதிலும் தடுப்புகளை கடந்து டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்த விவசாயிகள், தங்கள் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர்.
இதைத் தொடர்ந்து, விவசாயிகள் உடனடியாக சிங்கு எல்லைக்குத் திரும்ப வேண்டும் என்றும், இன்று நடந்த விரும்பத்தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளையும் நாங்கள் கண்டிக்கிறோம், அதற்காக வருந்துகிறோம் என்று விவசாய சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது ட்விட்டரில், "சிலரின் வன்முறை செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது. அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளால் உருவாக்கப்படும் நல்லெண்ணத்தை இது இருட்டடிப்பு செய்துவிடும். உண்மையாக போராடும் அனைத்து விவசாயிகளும் டெல்லியை விட்டு வெளியேறி மீண்டும் போராட்டக்களத்திற்கு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.