விவசாயிகள் நலனை காக்க மாநில சட்டத்தில் மாற்றங்கள் செய்வோம்... பஞ்சாப் அறிவிப்பு!!
டெல்லி: விவசாயிகளை பாதுகாக்க மாநில சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், மூன்று விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த காத்கர் காலன் கிராமத்தில் போராட்டதில் முதல்வர் அமரிந்தர் சிங் ஈடுபடுகிறார்,
மூன்று விவசாய மசோதாக்களை எதிர்த்து பெரிய அளவில் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் இருக்கும் இந்தியா கேட்டில் டிராக்டர் ஒன்று இன்று காலை தீ வைக்கப்பட்டது. இதனால் அந்த இடத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
மேலும், பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பெரிய அளவில் விவசாய மசோதாக்களை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தில் திமுக தோழமை கட்சிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் விவசாய மசோதாக்களால் விவசாயிகள் பாதிக்காத வகையில், மாநில சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில், ''மத்திய அரசின் முடிவுக்கு மாறாக விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் மாநில அரசின் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். விவசாயிகளின் நலன் மாநிலத்தில் பாதுகாக்கப்படும்..
மாநில சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு முன்பு அனைத்து விவசாயிகளின் தரப்பிலும் கருத்துக்கள், ஆலோசனைகள் பெறப்படும். மாநிலத்தில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களின் விலையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் கொள்முதல் செய்யப்படும்'' என்று பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் ''கிசான் மார்ச்'' என்ற பெயரில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு பேரணி நடத்துவதற்கும் அமரிந்தர் சிங் அழைப்பு விடுத்து இருக்கிறார். இன்று விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த காத்கர் காலன் கிராமத்தில் போராட்டதில் ஈடுபட இருப்பதாகவும் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.