வேளாண் மசோதாவை எதிர்த்து...இன்று முதல் 3 நாட்களுக்கு பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டம்!!
டெல்லி: வேளாண் மசோதாவை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ரயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.
இதுகுறித்து கிசான் மஸ்தூர் சங்கர்ஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சர்வன் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் செய்தியில், ''வேளாண் மசோதாவை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் இன்று முதல் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கு முடிவு செய்து இருக்கிறோம்'' என்று அறிவித்துள்ளார்.
புதிய சட்டங்களுக்கு எதிராக நாளை விவசாயிகளின் 'பாரத் பந்த்'
ஜனாதிபதி
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது ஜனாதிபதியின் கையெழுத்துக்காக காத்திருக்கிறது. இவர் கையெழுத்து இட்டால் இந்த மசோதாக்கள் சட்டமாகிவிவிடும். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மசோதா ராஜ்ய சபாவில் நிறைவேறுவதற்கு முன்பு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
ஹரிவன்ஷ் சிங்
இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்றும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விதிமுறைகள் அடங்கிய பேப்பரை கிழித்து எறிந்தனர். வேளாண் மசோதா நகலையும் கிழித்து எறிந்தனர். ராஜ்ய சபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் இருக்கைக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாக்கள் ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டன.
புறக்கணிப்பு
இதையடுத்துத் எதிர்க்கட்சியை சேர்ந்த எட்டு எம்பிக்கள் அவையில் இருந்து தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தி, அவை நடவடிக்கைகளை புறக்கணித்தனர்.
அரியானா
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததில் இருந்து நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அரியானா, பஞ்சாபில் விவசாயிகள் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் விவசாயம் சார்ந்த பூமி என்பதால், இங்கு பெரிய அளவில் விவசாயிகள், இடைத்தரகர்கள், மண்டிகள் என்று உள்ளன.
ஷிரோமணி அகாலிதளம்
இந்த மசோதாவால் இவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஷிரோமணி அகாலிதளம் கட்சியும் இந்த மசோதாவுக்கு இறுதி நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தக் கட்சியின் சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த ஹம்சிரத் கவுரும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தாக்குதல்
இதையடுத்து விவசாயிகள் போராட்டம் மேலும் உயிர் பெற்றது. பயிர்களுக்கான குறைந்தபட்ச விலை பாதிக்கப்படும், விவசாயம் கார்பரேட்களின் கைகளுக்கு செல்லும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் மீதான அப்பட்டமான தாக்குதல் என்று பஞ்சாப் காங்கிரஸ் பயங்கர எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
விவசாயிகள்
ஆனால், இந்த மசோதாக்களால் விவசாயிகள் சுதந்திரமான வர்த்தகத்திலும் ஈடுபடலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் 25 விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்துவதற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளது.