டெல்லியை நோக்கி.. வழியெங்கும் போர்க்களம்.. விவசாயிகள்-போலீசார் கடும் மோதல்!
புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து பஞ்சாப் விவசாயிகள், தலைநகர் டெல்லியை நோக்கி இன்று 2வது நாளாக பேரணியாக சென்றனர்.
அரியானா- டில்லி மாநில எல்லையில் உள்ள சிங்கு பகுதியில் போலீசாரின் தடுப்புகளை தாண்டி சென்றதால் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர்.
அந்த பகுதியே போர்க்களம்போல் காட்சியளித்தது. விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதாக டெல்லி உள்துறை மந்திரி கூறினார்.
விவசாயிகள் பேரணி
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாய சங்க விவசாயிகள் நேற்று பஞ்சாபில் இருந்து, டிராக்டர்களில் பேரணியாக டெல்லி நோக்கி சென்றனர்.
தடுத்து நிறுத்தம்
அரியானாவில் ஷம்பு பகுதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். விவசாயிகள் தடுப்புகளை தூக்கி வீசியதால் அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.தண்ணீரை பீய்ச்சி அடித்து, திரும்பி செல்லும்படி எச்சரித்தனர். ஆத்திரமடைந்த விவசாயிகள் தடைகள் விலக்கி பேரணியை தொடர்ந்தனர்.
2-வது நாளாக போராட்டம்
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக சென்றனர். டில்லி-அரியானா மாநில மாநில எல்லையான சிங்கு பகுதியில் விவசாயிகளை உள்ளே விடாதபடி பல அடுக்கு தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தினர். விவசாயிகள் செல்ல முடியாதவாறு சாலைகளில் ராணுவ பாணியில் குழிகளை வெட்டி போலீசார் தடுத்தனர். விவசாயிகள் செல்லும் வழியெங்கும் மணல் நிரம்பிய லாரிகள், முள்வேலிகளை அமைத்தனர்.
எங்களுக்கு பயம் கிடையாது
டெல்லியில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் டெல்லி மக்கள் நலன் கருதி, விவசாயிகளை அனுமதிக்க முடியாது எனவும்,அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். அதற்கு விவசாயிகள் கொரோனா வழிகாட்டுதலை எங்களுக்கு மட்டும் பின்பற்றுவது ஏன், இந்த தீமையான சட்டம்தான் எங்களுக்கு பயம், கொரோனாவை பற்றி பயம் இல்லை எனக்கூறி அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து முன்னோக்கி செல்ல முன்றனர்.
கண்ணீர் புகைக்குண்டு
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்; தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. விவசாயிகள் சிலர் போலீசார் மீது கற்களையும், கம்புகளையும் வீசினார்கள்.
போர்க்களம்
இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். இந்த மோதலில் விவசாயிகள் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. விவசாயிகளின் போராட்டத்தால் அரியானா-டெல்லி சாலையில் கடும் வாகன சோதனை நடத்தப்பட்டது. பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மைதானங்களே சிறை
விவசாயிகளின் போராட்டத்தால் அரியானா-டெல்லி சாலையில் கடும் வாகன சோதனை நடத்தப்பட்டது. பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தால் அவர்களை கைது செய்து, தங்க வைக்க டெல்லி நகரில் உள்ள 9 மைதானங்களை பயன்படுத்தி கொள்ள டெல்லி அரசிடம் காவல்துறை அனுமதி கேட்டது. டெல்லி அரசு இதற்கு அனுமதி மறுத்து விட்டது.
விவசாயிகள் அமைதியானவர்கள்
இது குறித்து டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள் முறையானவை. அவர்களை சிறையில் அடைப்பது பிரச்சினைக்கு தீர்வு அல்ல. அவர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.விவசாயிகளின் எதிர்ப்பு அமைதியான முறையில் நடைபெறுகிறது.. அகிம்சை எதிர்ப்பு என்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமையாகும். எனவே டெல்லி காவல்துறை கோரிக்கையை அரசு மறுத்துவிட்டது என்று ஜெயின் கூறினார்.