கண்ணீர் புகை குண்டுக்கு அஞ்ச மாட்டோம்... தலைநகரை நோக்கி முன்னேறும் பஞ்சாப் விவசாயிகள்!
புதுடெல்லி: மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை கண்டித்து தொடந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தலைநகர் டெல்லி நோக்கி பேரணியாக சென்றனர். அரியானா எல்லையில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
விவசாயிகளை தடுத்து நிறுத்தியதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூக்கி வீசினர்
ஆனால் அண்டை மாநிலமான அரியானா அரசு விவசாயிகளை மாநிலத்துக்குள் நுழைய அனுமதி மறுத்தது. முன்கூட்டியே மாநில எல்லைகளை மூடியது. விவசாயிகள் இரு மாநில எல்லை பகுதியான சாம்புவில் குவிந்தபோது, போலீசார் அவர்களை தடுப்பு காவல் வைத்து மறித்தனர்.
போலீசார் அடாவடி
இதனால் பொங்கி எழுந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர்கள் தடுப்பு வேலிகளை தூக்கி வீசினர். தொடர்ந்து முன்னேறி செல்ல முயன்றனர். அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டதால் போலீசார் தண்ணீரை பீச்சியடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விவசாயிகளை கலைத்தனர்.
வெற்றி பெற்றனர்
இருப்பினும் விவசாயிகள் களைந்து செல்ல மறுத்து அங்கேயே மையம் கொண்டனர். தொடர்ந்து விவசாயிகளை கட்டுப்படுத்தியபோது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. முடிவில் ஒருவழியாக தங்கள் போராட்டத்தில் விவசாயிகள் வெற்றி பெற்றனர்.
இது தவறு
3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு விவசாயிகள் அரியானா வழியாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். ஜனநாயக முறையில், அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் அடக்கு முறையால் தடுதது விட்டதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் கூட்டம் சாட்டினர்.
உறுதியுடன் உள்ளனர்
அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை தடுத்து நிறுத்துவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும், பாஜக ஆளும் மாநில அரசுகள் இத்தகைய போக்கை கைவிடுமாறும் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் தெரிவித்தார்.
போலீசார் குவிப்பு
அராஜக மோடி அரசு எத்தகைய கொடுமையை செய்தாலும் விவசாயிகள் அதனை எதிர்த்து தங்களது கொள்கைகளில் உறுதியுடன் நிற்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி கூறியுள்ளார். விவசாயிகள் அரியானா எல்லைக்குள் நுழைந்த போதிலும், டெல்லிக்குள் அவர்களை விடாமல் தடுக்க டெல்லி-அரியானா எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பின்வாங்க மாட்டோம்
அதன் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே தலைநகருக்குள் அனுப்பபடுகின்றன. ஆனால் எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், எங்களை ஒடுக்கினாலும் டெல்லிக்குள் சென்று போராட்டம் நடத்தியே தீருவோம் என விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.