மார்ச் 1 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்த பஞ்சாப்.. விவசாயிகள் போராட்டம் தொடர்வது சந்தேகம்!
டெல்லி: கொரோனா பரவலை தடுக்க பஞ்சாப் அரசு நேற்று முதல் உட்புற மற்றும் வெளிப்புறக் கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அத்துடன் மார்ச் 1 முதல் இரவு ஊரடங்கு உத்தரவுகளை விதிக்க துணை ஆணையர்களுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது. எனவே பஞ்சாபில் விவசாயிகளின் போராட்டம் எப்படி தொடரும் என்ற கேள்வி எழுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கூறி பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக டெல்லியின் எல்லைகளில் முகாமிட்டுள்ளனர். குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி செய்யக்கோரி பஞ்சாபிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம், 'ரெயில் ரோகோ' போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாபில் டெல்லி-லூதியானா-அமிர்தசரஸ் ரயில் பாதையில் பல இடங்களில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராடினார்கள். அசம்பாவிதங்களை தடுக்க பஞ்சாப் முழுவதும் பாதுகாப்பு அப்போது பலப்படுத்தப்பட்டது,
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சமுதயாக் கூட்டங்களில் நடைபெறும் எந்த கூட்டத்திலும் 100 பேரும் , வெளிப்பகுதியில் நடைபெறும் கூட்டங்களில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இரவு ஊடங்கும் மார்ச் 1 முதல் அறிவிக்கப்பட உள்ளது. அத்துடன் முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக உள்ளது. கொரோனா பரிசோதனையை ஒரு நாளைக்கு 30,000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவுறுத்தி உள்ளார்.
எனவே விவசாயிகளின் போராட்டங்கள் பஞ்சாப்பில் தொடர அனுமதிக்கப்படுமா என்பது இனி சந்தேகம் தான். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக மார்ச் 21 ஆம் தேதி பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்ற உள்ளார்.