முதல் ஆளாக பின் சீட்டில் இடம் பிடித்த 5 அடி மலைப்பாம்பு.. அதிர்ச்சியில் உறைந்த ஆட்டோ டிரைவர்!
டெல்லியில் ஆட்டோ ரிக்ஷாவில் மலைப்பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத.
டெல்லி: டெல்லியில் ஆட்டோ ரிக்ஷாவின் பின்பக்க இருக்கையில் மலைப்பாம்பு படுத்திருந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லி துக்ளகாபாத் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், இரவு தனது ஆட்டோவை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டார். காலையில் எழுந்து வந்து ஆட்டோவை எடுக்கும் போது பின்பக்க இருக்கையில் இருந்து ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்டிருக்கிறது.
ஆட்டோ ஓட்டுனர் என்னவென்று பார்த்தபோது, பின்பக்க இருக்கையில் 5 அடி நீளம் கொண்ட பெரிய மலைப்பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பாம்பு பிடிக்கும் தன்னார்வலர்கள் அமைப்பை தொடர்பு கொண்டு அவர் விஷயத்தை கூறினார்.
இதையடுத்து அந்த அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் இருவர் விரைந்து வந்து மலைப்பாம்பை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த பாம்பை அவர்கள் பிடித்து, பையில் அடைத்து எடுத்துச் சென்றனர். பின்னர் அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மக்கள் நெரிசல் அதிகம் கொண்ட டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் ஆட்டோவில் மலைப்பாம்பு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.