இருக்கு... பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் உண்டு.. சபாநாயகர்
டெல்லி: கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இரு அவைகளும் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டாலும் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் கேள்வி நேரம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து, பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டறிந்தார்.
பிறகு பேசிய அவர், பட்ஜெட் கூட்டத்தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் கோவிட் 19 கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டு வருகிறது. ராஜ்யசபா காலை 9 மணி துவங்கி, பகல் 2 மணி வரையிலும், லோக்சபா மாலை 4 மணி துவங்கி இரவு 8 மணி வரையிலும் செயல்படும். தடுப்பூசி செலுத்தும் முறை பார்லி., உறுப்பினர்களுக்கும் பின்பற்றப்படும்.
அனைத்து எம்பி.,களுக்கும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் ஆர்டி-பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படும். எம்பி.,க்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்படும். இந்த கூட்டத்தொடரிலும் கேள்வி நேரம் இடம்பெறும் என்றார்.
பார்லி., கேன்டீன் தொடர்ந்து வடக்கு ரயில்வேயின் இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் நடத்தப்படும். எம்பி.,க்கள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் ஆகியோருக்கு தொடர்ந்து மானிய விலையில் உணவு வழங்கப்படும் எனவும் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.
மானிய விலை உணவுகளை ரத்து செய்தால் ஆண்டுக்கு ரூ.8 கோடிக்கு மேல் மிச்சமாகும் என லோக்சபா செயலகம் கருதுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுத்தல் காரணமாகவே மானியங்கள் தொடர்வதாக கூறப்படுகிறது.