ராதாபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் வழக்கு.. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
டெல்லி: ராதாபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் வழக்கு விசாரணையை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் அப்பாவு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரையை விட 49 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார்.
இதையடுத்து, இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவிர்ல 203 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்றும், சில சுற்றுகளில் எண்ணப்பட்ட வக்குகளில் முறைகேடு நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வாக்குப்பதிவு எந்திரங்களில் 19, 20, 21 ஆகிய மூன்று சுற்றுகளில் பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் நியமித்த ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்தது.
இதனிடையே, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டதுடன், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.
இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று நடந்தது. அப்போது, ராதாபுரம் தொகுதியில் எண்ணப்பட்ட மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணை வரும் மார்ச் 16ம் தேதி நடைபெறும் என்று கூறி ஒத்திவைத்தது.