3 பேர்.. எல்லோருமே செம கண்டிப்பு.. ரபேல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இவர்கள்தான்!
ரபேல் ஒப்பந்த மறுசீராய்வு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூவருமே மிகவும் கண்டிப்பானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
டெல்லி: ரபேல் ஒப்பந்த மறுசீராய்வு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூவருமே மிகவும் கண்டிப்பானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ரபேல் தொடர்பான இரண்டு வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பது தொடர்பான வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு முடிவிற்கு வந்தது.
உச்ச நீதி மன்றம் இந்த மறுசீராய்வு வழக்கை இன்று தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
நீதிபதி கே எம் ஜோசப் யார்
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே எம் ஜோசப் பலரின் பார்வையையும் ஈர்த்து இருக்கிறார். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நீதிபதி கேஎம் ஜோசப் உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். இவரை உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்ய மத்திய அரசு எதிர்த்து வந்தது. கொலிஜியம் செய்த பரிந்துரையை மத்திய அரசு இரண்டு முறை நிராகரித்து கடைசியில் ஏற்றுக்கொண்டது.
எப்படி இருந்தார்
2016ம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தில் மத்திய பாஜக அமைச்சரவையின் பரிந்துரையின் பெயரில் குடியரசு தலைவரின் ஆட்சி கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிராக தீர்ப்பளித்தவர்தான் நீதிபதி கே எம் ஜோசப். இதனால் அவரை ஆந்திர பிரதேச நீதிமன்றத்திற்கு மாற்ற மத்திய அரசு பரிந்துரை செய்தது. ஆனால் அதை கொலிஜியம் ஏற்கவில்லை.
எஸ்கே கவுல் யார்
இந்த வழக்கில் இன்னோர் முக்கியமான நீதிபதி எஸ்கே கவுல். சஞ்சய் கிஷான் கவுல் என்று அழைக்கப்படும் இவர் தீர்ப்பு வழங்கும் நேரத்தில் வித்தியாசமான வாசகங்களை பயன்படுத்துவார். அதேபோல் வாதங்களின் போது இவர் வழக்கறிஞர்களை கடுமையான கேள்விகள் கேட்டு திணற வைத்து இருக்கிறார். ரபேல் வழக்கிலும் அரசு தரப்பை இவர் கடுமையான கேள்விகளால் திளைத்தார்.
டெல்லி ஹைகோர்ட்டில் நீதிபதியாக இருந்த இவர் சென்னை ஹைகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், ஹரியானா பஞ்சாப் ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதியாகவும் இருந்துள்ளார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இவரின் குடும்பம் மொத்தமும் அரசியல் சார்ந்தது. இவரின் அப்பா, தாத்தா இருவரும் மத்திய, மாநில அமைச்சர்களாக இருந்துள்ளனர்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
அதேபோல் இந்த அமர்வின் முன்னவராக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இருக்கிறார். ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதியோடு ஓய்வு பெறுகிறார். அதற்குமுன் அவர் இந்த முக்கியமான வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளார். அயோத்தி வழக்கில் கடந்த வாரம்தான் இவர் தீர்ப்பு வழங்கினார். பஞ்சாப் நீதிமன்றத்திலும், ஹரியானா உயர்நீதிமன்றத்திலும் நியமிக்கப்பட்டு, பின் அங்கேயே தலைமை நீதிபதி ஆனார். அதன்பின் 2012ல் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார்.
அதிக அனுபவம்
நீதிபதி ரஞ்சன் கோகாய் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இவர் 1978லேயே பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டார். இவர் குறிப்பிடத்தக்க சில வழக்கு விசாரணையில் நீதிபதியாக இருந்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின், சிபிஐ தரப்பு வாத விசாரணையில் ஒரு நீதிபதியாக இருந்தார். மிகவும் கண்டிப்பான நீதிபதி என்று பெயர் பெற்றவர்.