சிஏஜி ஆடிட்டரே ரபேல் ஒப்பந்த ஊழலில் தொடர்புடையவர்தான்.. காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு!
ரபேல் ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கும் ஆடிட்டர் ராஜீவ் மெரிஷி, பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுபவர் என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது.
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கும் ஆடிட்டர் ராஜீவ் மெரிஷி, பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுபவர், அவருக்கும் ரபேல் ஊழலில் தொடர்பு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. ரபேல் விலை என்ன என்பது குறித்த விவரங்கள் இதில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.
சிஏஜி தலைமை ஆடிட்டர் ராஜீவ் மெரிஷி தலைமையிலான குழு இந்த அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறது. ரபேல் ஒப்பந்தம் குறித்த பல உண்மைகள் இதன் மூலம் வெளியாக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
குற்றச்சாட்டு வைத்தனர்
இந்த நிலையில் இந்த அறிக்கையை தயார் செய்து இருக்கும் சிஏஜி தலைமை ஆடிட்டர் ராஜீவ் மெரிஷி, மீது காங்கிரஸ் சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறது. இந்த அறிக்கையை தயார் செய்வதில் இருந்து ராஜீவ் விலகிக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், வழக்கறிஞருமான கபில் சிபல் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர்தான்
கபில் சிபல் இதுகுறித்து பேசியதாவது , பாஜகவால் ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டு 36 விமானங்களுக்கு கையெழுத்திடப்பட்டது. அதன்பின் காங்கிரஸ் செய்திருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் போது மத்திய பொருளாதார செயலாளராக இருந்தவர்தான் இந்த ராஜீவ். இவர் எப்படி நேர்மையான சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்க முடியும்.
எப்படி முடியும்
அதேபோல் ராஜீவும் இந்த ரபேல் ஒப்பந்தத்தில் தொடர்பு உடையவர்தான். பொருளாதார செயலாளர் மற்றும் அவரின் குழு, ரபேல் ஒப்பந்த பேர அணியில் இடம்பெற்று இருந்தது என்று மத்திய அரசுதான் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. அதன்முலம் ராஜீவும் ரபேல் ஒப்பந்தத்தில் தொடர்பு உடையவர் என்பது புலனாகிறது.
தொடர்பு உள்ளது
உங்களுக்கு நேரடியாக தெரிந்தோ, மறைமுகமாக தெரிந்தோதான் இந்த ஒப்பந்தத்தில் ஊழல் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெளிவாக தெரிகிறது. நீங்கள் இந்த சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்வது எந்த விதத்தில் சரியானதாக இருக்கும் என்று சொல்லுங்கள். உங்களுடைய தவறுக்கு நீங்களே எப்படி தீர்ப்பு வழங்க முடியும்., கபில் சிபல், ராஜீவிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.