தயாரானது ரபேல் சிஏஜி அறிக்கை.. மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது.. விரைவில் லோக்சபாவில் தாக்கல்!
ரபேல் ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.
ரபேல் ஒப்பந்தம் குறித்து முக்கிய திருப்பம் இன்னும் சில நாட்களில் நடக்க போகிறது. ரபேல் ஒப்பந்தம் குறித்த அனைவரும் எதிர்பார்க்கும் சிஏஜி அறிக்கை இன்றோ, நாளையோ லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் நாளை இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என்று கூறுகிறார்கள்.
ரபேல் ஒப்பந்தம்
ரபேல் ஒப்பந்தம் மூலம் கூடுதல் விலைக்கு குறைவான விமானங்களை மத்திய அரசு வாங்கி இருக்கிறது என்பதுதான் காங்கிரஸ் பாஜக மீது வைக்கும் குற்றச்சாட்டு. 36 விமானங்களை ஒரு விமானத்திற்கு 41% கூடுதல் விலை வைத்து மத்திய அரசு வாங்கி இருக்கிறது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
வழக்கு விசாரணை
இது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. 5 மனுதாரர்கள் இந்த வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்து இருக்கிறார்கள். இதன் மீதான விசாரணை எப்போது வேண்டுமானாலும் உச்ச நீதிமன்றத்தில் நடத்தப்படலாம்.
தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை தயார் செய்யப்பட்டு இருக்கிறது. இது மத்திய அரசின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. குடியரசுத்தலைவரின் அனுமதி பெற்றபின் இது லோக்சபாவில் இன்றோ நாளையோ தாக்கல் செய்யப்படும்.
விலை
இதில் ரபேல் விமானத்தின் விலை என்ன என்ற விவரம் இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் எப்படி ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது என்பது குறித்து விவரங்கள் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த அறிக்கை ரபேல் வழக்கில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.