நிர்மலா சீதாராமன் செய்தது பெரும் தவறு.. ரபேலில் குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!
ரபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் பொய் சொன்னது எல்லாம் தற்போது நிரூபணம் ஆகியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் சொன்னது எல்லாம் தற்போது நிரூபணம் ஆகியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
ரபேல் ஊழல் விவகாரம் கொதிப்பான நிலையை அடைந்து இருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டிதான் தற்போது இந்தியாவின் தலைப்புச்செய்தி.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வெளியாகி உள்ள பாதுகாப்பு துறையின் கடிதங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடி, ரபேல் ஒப்பந்தம் நடந்த போது, தனியாக ரபேல் தொடர்பான பேரத்தை மறைமுகமாக நடத்தினார், என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.
எல்லாம் பொய்
ராகுல் காந்தி தனது பேட்டியில், உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். நிர்மலா சீதாராமன் மக்களிடம் பொய் சொல்லிவிட்டார். மக்களிடம் மட்டுமல்ல அவர் நீதிமன்றத்திலும் பொய் சொல்லிவிட்டார். முன்னாள் பிரான்ஸ் அதிபரே மோடியின் உத்தரவால்தான் அனில் அம்பானியை ஒப்பந்தத்தில் சேர்த்ததாக கூறியுள்ளார்.
என்ன காரணம்
நான் முன்னாள் மத்திய அமைச்சர் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை சந்தித்தேன். அதில் எந்த விதமான அரசியல் தொடர்பான பேச்சும் இல்லை. அவரை நலம் விசாரித்தேன். நாங்கள் ரபேல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. அவரது உடல்நிலை குறித்து மட்டுமே பேசினேன்.
எல்லாம்
இன்னும் கொஞ்ச நாள்தான் இந்த வழக்கில் எல்லா உண்மையும் வெளியே வரும். இப்போதுதான் ஆவணங்கள் எல்லாம் வெளியே வர தொடங்கி இருக்கிறது. இன்னும் சில நாட்களில் சிஏஜி அறிக்கை வரும். அப்போதும் மொத்தமாக பாஜக பொய் சொன்னது அம்பலம் ஆகும்.
மிகப்பெரிய தவறு
பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் பெரிய தவறை செய்துவிட்டார். அவர் லோக்சபாவில் பொய் சொல்லி இருக்க கூடாது. நீதிமன்றத்தில் பொய் சொல்லி இருக்க கூடாது. இப்போது இரண்டையும் செய்துவிட்டு அவர் மாட்டிக்கொண்டு இருக்கிறார். இதற்கான விளைவுகளை அவர் சந்திப்பார்.