மோடி, ராகுல் & பல்லாயிரம் செய்தியாளர்களை பரபரப்பிற்கு உள்ளாக்கிய ஒரே கடிதம்!
ரபேல் ஊழல் பிரச்சனை இன்னும் முடியவில்லை.. இப்போதுதான் தொடங்கி இருக்கிறது.
Recommended Video
டெல்லி: ரபேல் ஊழல் பிரச்சனை இன்னும் முடியவில்லை.. இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. புதிதாக வெளியாகி இருக்கும் பகீர் ஆவணங்கள் ரபேல் ஊழலை மீண்டும் உயிர்பெற செய்துள்ளது.
ஒரு புகைப்படம்தான் பல நாட்களாக நடந்து வந்த வியட்நாம் போரை நிறுத்தியது.. ஒரு செய்தியாளரின் புகைப்படத்திற்கு அத்தனை வலிமை இருக்கிறது. அப்படி ஒரு செய்திதான் இன்று தேசிய அரசியலை பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.
இதெல்லாம் இனி பிரச்சனை கிடையாது என்று பாஜகவால் ஓரங்கட்டப்பட்ட ரபேல் ஊழல் விவகாரத்தை ஒரு கடிதம் உயிர்பெற செய்து இருக்கிறது.
ரபேல் ஊழல் குற்றச்சாட்டு
ரபேல் ஒப்பந்தத்தில் காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டு, ''பாஜக அரசு 126 விமானங்களுக்கு பதில் 36 விமானங்களை மட்டும் வாங்கியுள்ளது. ஆனால் அதை காங்கிரஸ் நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு பாஜக வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் எச்எல்ஏக்கு பதிலாக ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு விமானத்தின் விலை 41% அதிகரித்துள்ளது'' இதுதான்.
வழக்கும் மேல்முறையீடும்
இந்த குற்றச்சாட்டுகளை அடுக்கி, ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தொடுத்தனர். ஆனால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இதை தள்ளுபடி செய்தது. குற்றச்சாட்டிற்கு போதிய அடிப்படை இல்லை என்று நீதிமன்றம் கூறியது.
மீண்டும் வந்தது
இந்த நிலையில் வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் ஆகியோர் வரிசையாக மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணை விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில்தான் தி இந்து ஆங்கில பத்திரிக்கையில் பத்திரிக்கையாளர் என்.ராம் எழுதி வெளியான கட்டுரை திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் வெளியான ரபேல் கடிதம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
|
என்ன ஆவணம்
ரபேல் ஒப்பந்தம் நடந்த போது, ஒப்பந்த அதிகாரிகள் சார்பாக, அப்போது பாதுகாப்பு மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கருக்கு எழுத்தப்பட்ட கடிதம்தான் பிரச்னைக்கு காரணம். இந்த கடிதத்தை வைத்துதான் தி இந்து பத்திரிக்கை கட்டுரையை எழுதியுள்ளது. இந்த கடிதம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், இது பிரதமர் மீது குற்றஞ்சாட்டி, பாதுகாப்பு மந்திரிக்கு எழுதப்பட்ட கடிதம் ஆகும்.
அறிமுகம்
ரபேல் ஒப்பந்த பேச்சுவார்த்தைக்காக அரசு அமைத்து இருந்த குழுதான் ஐஎன்டி என்று அழைக்கப்படும் Indian Negotiating Team. இந்த குழுவிற்குதான் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரம் இருக்கிறது. இந்த குழு இல்லாமல் இந்தியாவில் இருந்து யாராவது பேச்சுவார்த்தையை நடத்தினால், அது முறைகேடானது, தவறானது. ஆனால் இந்த தவறை செய்திருப்பது பிரதமர் மோடி என்றுதான் அந்த கடிதத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
2015ல்
2015 நவம்பர் 24ல் எழுதப்பட்ட இந்த கடிதத்தில், ''ஐஎன்டி உறுப்பினர்கள் சார்பில் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி இன்னொரு பக்கம் தனியாக ரபேல் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நாங்கள் செய்யும் ஒப்பந்தத்திற்கு எதிராக பிரதமர் மோடியின் பேச்சுவார்த்தை இருக்கிறது.
என்ன குற்றச்சாட்டு
இதனால் பாதுகாப்பு துறை இதில் தலையிட்டு, இந்த பிரதமரின் தனிப்பட்ட பேர பேச்சுவார்த்தையை தடுத்து நிறுத்த வேண்டும். பிரதமரோ அவரது அலுவலகமோ ஐஎன்டி குழுவிற்கு எதிராக பேச்சுவார்த்தை நடத்துவது தவறானது. இது ஐஎன்டியின் விதி முறைக்கு எதிரானது. ஒப்பந்த விதிமுறைக்கு எதிரானது'' என்று, அந்த கடிதத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.
பொய் சொல்லி இருக்கிறது
இந்த நிலையில் ரபேல் ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த ஆவணம் ஒன்றில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக 7 பேர் கொண்ட ஐஎன்டி குழு பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றுள்ளது. ஆனால் அதில் வசதியாக, பிரதமர் மோடி, தனியாக நடத்திய பேச்சுவார்த்தையை மத்திய அரசு மறைத்து இருக்கிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அரசு பொய் சொல்லி உள்ளது.
மோகன் குமார்
மேலே குறிப்பிட்ட அந்த கடிதத்தை எழுதியவர் பாதுகாப்பு துறை அதிகாரியாக இருந்த ஜி மோகன்குமார். பிரதமர் மோடி, தனியாக ரபேல் தொடர்பான பேரத்தை நடத்துகிறார். இது முறையானது கிடையாது. பாதுகாப்பு துறை இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த ஒரு கடிதம்தான் தற்போது அனைத்து பிரச்சனைக்கும் காரணம்.
அம்பானி குறித்து பேசினார்
ஏற்கனவே பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலண்டே, பிரதமர் மோடிதான் ரபேல் ஒப்பந்தத்தை எச்ஏஎல்லுக்கு பதில், ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க சொன்னார் என்று கூறினார். தற்போது, பிரதமர் மோடி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்காகத்தான் இப்படி தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால்தான் ஒப்பந்தம் கைமாறியது என்று புகார் எழுந்து இருக்கிறது.
இதுதான் விலை அதிகமாக காரணம்
அதேபோல் இந்தியாவின் ஐஎன்டி இருக்கும்போதே அதை மதிக்காமல் பிரதமர் செயல்பட்டதால்தான், ஒரு விமானத்தின் விலை ஏகபோகத்திற்கு ஏற்றப்பட்டு இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தை உள்ளே கொண்டு வர பிரான்ஸ் ஒப்புக்கொண்டதே, விலை ஏற்றம் என்ற கோரிக்கையை வைத்துத்தான். அதனால் மோடியின் பேரம் மூலம் ரிலையன்ஸ் உள்ளே வந்து, அதன்முலம் விமான விலை ஏற்றப்பட்டு, அதன்மூலம் இந்தியாவிற்கு நஷ்டம் ஏற்பட்டது.. இதுதான் இந்த ஊழலின் ஒருவரி சாராம்சம்!
இதனால் என்ன பிரச்சனை
மோடி ஐஎன்டியை மதிக்காமல் பேரம் பேசியது என்ன தவறா? என்று கேட்டால், ஆம் தவறுதான் என்கிறார்கள் வல்லுநர்கள். ஏனென்றால் எந்த ஒரு இந்திய பிரதமரும் இதற்கு முன் இப்படி நிறுவனம் ஒன்றுடன் ஐஎன்டிக்கு எதிராக பேரம் பேசியது கிடையாது. ஆனால் பிரதமர் மோடி பேரம் பேசியது மட்டுமில்லாமல், அந்த ஒப்பந்தம் கைமாறவும் ஒரு வகையில் காரணமாக இருந்தார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
ராகுல் குற்றச்சாட்டு
இந்த நிலையில் இந்த கடிதம் இன்று காலையில் வைரலானது. அடுத்த 20 நிமிடத்தில் ராகுல் காந்தியிடம் இருந்து ஒரு டிவிட் வந்தது. இந்தியா ராணுவத்தின் சகோதர சகோதரிகளே.. நீங்கள்தான் எங்கள் பாதுகாவலர்கள்., உங்கள் வாழ்க்கையை எங்களுக்காக அர்பணித்துள்ளீர்கள், நீங்கள்தான் எங்கள் பெருமை.. ரபேல் ஊழல் குறித்து இன்று காலை 10.30 மணிக்கு பேசுகிறேன், என்று கூறினார்.
பரபர பேச்சு
அதேபோல் பேசிய ராகுல் காந்தி , மோடி மீது பரபர குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மோடி ஒரு திருடர்,மோடி அனில் அம்பானிக்காக திருடிவிட்டார், நிர்மலா சீதாராமன் பொய் சொல்லிவிட்டார் என்று பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்த பேட்டி, உண்மையில் ராகுலின் அதிக பரபரப்பை ஏற்படுத்திய பேட்டிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றம் முடக்கம்
இந்த பேட்டி முடிந்த சில நிமிடத்தில் நாடாளுமன்றமும் முடங்கியது. ரபேல் ஒப்பந்தத்தை கையில் எடுத்த காங்கிரஸ் பெரிய அளவில் அமளி செய்தது. காங்கிரஸ் மட்டுமில்லாமல் மற்ற எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக அமளியில் ஈடுப்பட்டது. ரபேலால் மீண்டும் ஒரு முறை நாடாளுமன்றம் மொத்தமாக முடங்கியது.
மோடி அதிர்ச்சி
பிரதமர் மோடி நேற்றுதான் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக லோக்சபாவில் ஒரு மணி நேரம் பேசினார். ஆனால் இன்று அதற்கான சுவடே இல்லாமல் போய்விட்டது. ஆம் நேற்று மோடி பேசியது இரண்டு நாளுக்காவது விவாதிக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் இன்று காலையே ரபேல் பிரச்சனை மீண்டும் வந்து மோடியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
செய்தியாளர்களுக்கு பரபரப்பு
இந்த விஷயத்தால் காலை ஏழு மணியில் இருந்து இந்தியா முழுக்க இருக்கும் பல்லாயிரக்கணக்கான செய்தியாளர்கள் பெரும் பரபரப்பிற்கு உள்ளாகி உள்ளார்கள். அடுத்தடுத்த செய்திகளால் பெரும் பரபர சூழ்நிலை நிலவி வருகிறது. இப்போது சொல்லுங்கள்.. ஒரு புகைப்படம் வியட்நாம் போரை நிறுத்தியது போலத்தானே,.. இந்த ஒரு கடிதமும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.