ரபேல்.. மத்திய அரசுக்கு பெரும் அடி.. கத்தி போல் தொங்கும் புதிய ஆதாரங்கள்.. அடுத்து என்ன நடக்கும்?
ரபேல் வழக்கில் புதிய திருப்பமாக மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
Recommended Video
டெல்லி: ரபேல் வழக்கில் புதிய திருப்பமாக மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதனால் இந்த வழக்கு புதிய ஆதாரங்களின் அடிப்படையில்தான் இனி நகரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரபேல் வழக்கில் எந்த விதமான முறைகேடும் நடந்தது போல தெரியவில்லை, அதனால் இதை விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் கூறியது. அவ்வளவுதான் ரபேல் வழக்கு முடிந்துவிட்டது என்று எல்லோரும் நினைத்தார்கள்.
ஆனால் அதன்பின் நடந்தது எல்லாம் போபர்ஸ் கால வரலாறு. யாரும் நினைக்காத ஒரு நாளில்தான் தி இந்து நாளிதழில் மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் ஒரு கட்டுரையை எழுதி இருந்தார்.
ரபேல் வழக்கில் திருப்பம்.. கசிந்த ஆதாரங்களை விசாரிக்கலாம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கசிந்த ஆதாரங்கள்
இந்த கட்டுரை வெறும் வார்த்தை ஜாலங்கள், குற்றச்சாட்டுகள், தகவல்கள் போல இல்லாமல் ஆதாரங்களுடன் இருந்தது. பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கசிந்த ஆதாரங்களை இவர் வெளிட்டு கட்டுரை எழுதி இருந்தார். மிக முக்கியமாக பிரதமர் மோடியின் அலுவலகத்தை இவர் நேரடியாக தனது ஆதாரங்கள் மூலம் குற்றஞ்சாட்டி இருந்தார்.
வழக்கு
அதன்பின் சரியாக ரபேல் வழக்கில் மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை வந்தது. எல்லோரும் எதிர்பார்த்தது போலவே, மத்திய அரசுக்கு எதிராக இந்த கசிந்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதை கடுமையாக எதிர்த்தது. மாறாக இந்த ஆதாரங்களை தற்போது உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
என்ன ஆதாரம்
ரபேல் வழக்கில் இதுவரை தி இந்து மூலம் பத்திரிக்கையாளர் என்.ராம் வெளியிட்ட ஆதாரங்கள் இவைதான்.
- ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது.
- ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய ஒப்பந்த குழுவின் பேச்சுவார்த்தை மட்டுப்படுத்தப்பட்டது.
- பிரதமர் அலுவலகத்தின் பேச்சுவார்த்தைக்கு இந்திய குழுவே எதிர்ப்பு தெரிவித்தது.
- ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக ஒப்பந்த விதிகளை தளர்த்தியது.
- முறைகேடாக ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.
- ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு, பிரான்ஸ் அரசு எந்த விதமான வங்கி உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதனால் ரபேல் ஒப்பந்தத்தில் திட்டமிடப்பத்தை விட இந்தியாவிற்கு அதிக செலவு ஏற்பட்டு உள்ளது என்பது குறித்த ஆதாரம்.
- சிஏஜி அறிக்கையில் தவறான தகவல்கள் உள்ளது குறித்த ஆதாரம்.
- மிக முக்கியமாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உண்மைகளை மறைத்தது.
ஏன் முக்கியம்
இந்த வழக்கு தற்போதுதான் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. சென்ற வருடம் முழுக்க மத்திய அரசுக்கு சாதகமாக இருந்த வழக்கு தற்போது மொத்தமாக அப்படியே தடம் மாறி உள்ளது. இனி முழுக்க முழுக்க மத்திய அரசுக்கு எதிரான இத்தனை ஆதாரங்களும் இந்த வழக்கில் விசாரணை செய்யப்பட இருக்கிறது.
ஏன் பின்னடைவு
இந்த திடீர் உத்தரவு மத்திய அரசுக்கு பல வகையில் பின்னடைவை ஏற்படுத்தும்.
இந்த புதிய ஆதாரங்களின்படி பிரதமர் அலுவலகம் நேரடியாக குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது. அவர்களிடம் இதனால் விளக்கம் கேட்கப்படும்.
பிரதமர் அலுவலகம் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியது புதிய ஆதாரத்தில் அம்பலம் ஆகி உள்ளது.
பாதுகாப்பு துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் பொய் சொல்லி உண்மைகளை மறைத்து இருக்கிறது.
பொய்யான கணக்குகளை காட்டியதால், இதில் சிஏஜியும் சிக்கும் நிலையில் இருக்கிறது.
இனிதான் விசாரிக்கும்
இந்த வழக்கில் புதிய ஆதாரங்களின் அடிப்படையில் மீண்டும் முதலில் இருந்து உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மத்திய அரசு இந்த ஆவணங்களை திருடிவிட்டார்கள் என்று கூறி இருக்கிறது. அதனால் இந்த ஆவணங்கள் உண்மைதான் என்பதை மத்திய அரசே ஒப்புக்கொண்டு இருக்கிறது. அதனால் அதன் அடிப்படையிலேயே இனி விசாரணை நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.