ரபேல் வழக்கு.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்.. 4 நாட்களில் பதில் அளிக்க உத்தரவு!
ரபேல் ஊழல் தொடர்பான வழக்கின் மறுசீராய்வு விசாரணை வரும் மே 6ம் தேதி தொடங்க உள்ளது.
டெல்லி: ரபேல் ஊழல் தொடர்பான வழக்கின் மறுசீராய்வு விசாரணை வரும் மே 6ம் தேதி தொடங்க உள்ளது. இந்த வழக்கில் உடனடியாக பதில் அளிக்க கோரி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ரபேல் வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசுக்கு ஆதரவான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் இந்த வழக்கின் கோரிக்கை. இது தொடர்பான மறுசீராய்வு வழக்கு இரண்டு மாதமாக நடந்து வருகிறது.
வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது விசாரிக்கப்படுகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தி வருகிறது.
கடந்த அமர்வின் போது, இந்த வழக்கில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கசிந்த ஆதாரங்களை விசாரிக்க போவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ரபேல் வழக்கில் கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தி இந்து இதழில் வெளியான ஆதாரங்களை ஏற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் ரபேல் ஊழல் தொடர்பான வழக்கின் மறுசீராய்வு விசாரணை வரும் மே 6ம் தேதி தொடங்க உள்ளது. இந்த வழக்கில் உடனடியாக பதில் அளிக்க கோரி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மத்திய அரசு இதற்கு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் கேட்டது. ஆனால் 4 நாட்கள் மட்டுமே அரசுக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. அதன்படி மே 4ம் தேதிக்குள் மத்திய அரசு இதில் பதில் அளிக்க வேண்டும். பின் மே 6ம் தேதி இந்த வழக்கு மீதான விசாரணை நடக்கும்.
தேர்தல் நடந்து வரும் நேரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருவது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.