உச்ச நீதிமன்றத்தில் ஏற்பட்ட தேதி குழப்பம்.. ரபேல் மறுசீராய்வு விசாரணை ஒத்திவைப்பு!
ரபேல் ஊழல் தொடர்பான வழக்கின் மறுசீராய்வு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடக்க உள்ளது.
டெல்லி: ரபேல் ஊழல் தொடர்பான வழக்கின் மறுசீராய்வு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் என்று கருதப்பட்ட நிலையில் தேதி குழப்பம் காரணமாக இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
ரபேல் வழக்கில் டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணைதான் இன்று நடக்க இருந்தது.
ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். இதில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு உள்ளது. ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் முறைகேடாக இதில் உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளது, என்று இந்த வழக்கில் கூறப்பட்டது. ஆனால் முதலில் தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தற்போது மறுசீராய்வு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மறுசீராய்வு வழக்கு இரண்டு மாதமாக நடந்து வருகிறது. வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது விசாரிக்கப்படுகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தி வருகிறது.
கடந்த அமர்வின் போது, இந்த வழக்கில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கசிந்த ஆதாரங்களை விசாரிக்க போவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ரபேல் வழக்கில் கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தி இந்து இதழில் வெளியான ஆதாரங்களை ஏற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதன் பின் இன்றுதான் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் கசிந்த ஆதாரங்களை விசாரிக்க கூடாது என்று கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு மீண்டும் பிரமாணபத்திரம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது இன்று காலை விசாரிக்கப்படாமலே ஒத்தி வைக்கப்பட்டது.
ரபேல் வழக்கில் மோடியை நீதிமன்ற திருடன் என்று கூறிவிட்டதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். இதற்கான எதிராக வேறு ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், திருடன் என்று குறிப்பிட்டது குறித்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்.
இந்த வழக்கும், ரபேல் மெயின் வழக்கும் ஒன்றாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி சென்ற விசாரணையின் போதே குறிப்பிட்டு இருந்தார். ஆனால், இன்று ரபேல் மெயின் வழக்கு மட்டுமே விசாரணைக்கு வந்தது, மாறாக, மோடி திருடன் என்பது குறித்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை. அந்த வழக்கு மே 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இதனால் குழப்பம் அடைந்த நீதிபதிகள் இரண்டு வழக்கையும் சேர்த்து மே 10ம் தேதி விசாரிப்பதாக உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.