ரபேல் வழக்கு.. கசிந்த ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்குமா?.. உச்ச நீதிமன்ற உத்தரவு ஒத்திவைப்பு!
ரபேல் வழக்கில் கசிந்து இருக்கும் ஆதாரங்களை விசாரிப்பது குறித்து அடுத்த அமர்வில் உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க இருக்கிறது.
Recommended Video
டெல்லி: ரபேல் வழக்கில் கசிந்து இருக்கும் ஆதாரங்களை விசாரிப்பது குறித்து அடுத்த அமர்வில் உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க இருக்கிறது. இந்த கசிந்த ஆவணங்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது குறித்த அனைத்து வாதங்களும் தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் இந்த வழக்கின் கோரிக்கை. இந்த ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கு தொடுத்தனர்.
சென்ற வருடம் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ரபேல் ஒப்பந்தம் மத்திய அரசின் கொள்கை முடிவு, இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ரபேல்.. ஊழல் வழக்கில் உளவு ரகசியங்கள் கூட விசாரிப்போம்.. மத்திய அரசுக்கு நீதிபதிகள் விளாசல்!
எதிர்த்து மனு
இதில் தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் மனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது விசாரிக்கப்படுகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தி வருகிறது.
என்ன ஆதாரம்
ரபேல் ஒப்பந்தத்தில் மத்திய அரசு செய்த முறைகேடுகளை கடந்த சில வாரங்களுக்கு முன் தி இந்து பத்திரிக்கையில் பத்திரிக்கையாளர் என்.ராம் எழுதி இருந்தார். இதில் அவர் முக்கிய ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார். இது நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இந்த ஆதாரங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தது.
ஆனால் என்ன
ஆனால் திருடப்பட்ட, கசிந்த ஆவணமாக இருந்தாலும் கூட, ராணுவ ரகசியமாக இருந்தாலும் கூட அதை கருத்தில் கொள்ளலாம், என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மனுதாரர் பிரஷாந்த் பூஷன் தரப்பும் இதே வாதத்தை நீதிமன்றத்தில் வைத்தது. இதில் நீதிபதிகள் மத்திய அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பினார்கள்.
உத்தரவு என்ன
ரபேலில் கசிந்த ஆவணங்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது குறித்த அனைத்து வாதங்களும் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. இந்த நிலையில்தான் இந்த ஆவணங்கள் விசாரிக்கப்படுமா என்று நீதிமன்றம் அடுத்த அமர்வில் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. ரபேல் வழக்கின் இந்த மிக முக்கிய உத்தரவு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.