ரபேல்.. ஊழல் வழக்கில் உளவு ரகசியங்கள் கூட விசாரிப்போம்.. மத்திய அரசுக்கு நீதிபதிகள் விளாசல்!
ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருக்கும் பட்சத்தில் அது தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் எந்த ஆதாரங்களையும் விசாரிப்போம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருக்கும் பட்சத்தில் அது தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் எந்த வித ஆதாரங்களையும் விசாரிப்போம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ரபேல் வழக்கில் இன்று காரசார விவாதம் நடந்தது. மத்திய அரசுக்கு எதிராக ரபேல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் ஆதாரங்களை விசாரிக்க கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம் செய்தது. அது திருடப்பட்ட ஆவணங்கள் என்று வாதம் செய்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் , நீதிபதிகள் கே.எம் ஜோசப், எஸ்.கே கவுல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
என்ன விசாரணை
இன்று நடந்த விசாரணையில் மத்திய அரசு கடுமையான வாதங்களை வைத்தது. மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், நாங்கள் தாக்கல் செய்த சிஏஜி அறிக்கையில் சிறிய தவறு இருக்கிறது. சிஏஜி அறிக்கையில் முதல் மூன்று பக்கங்கள் விடுபட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அந்த பக்கங்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும், என்று கூறினார்.
ரபேல் திருட்டு
அதன்பின் கேகே வேணுகோபால், ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருடப்பட்ட ஆவணங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள கூடாது. அனுமதி இல்லாமல் தேசிய பாதுகாப்பு ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரபேல் ஆவணங்களை நீதிமன்றம் ஆதாரங்களின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், என்று கூறினார்.
நீதிபதிகள் மறுப்பு
ஆனால் அதை மறுத்த நீதிபதி ஜோசப், ஊழல் நடந்திருக்கும் பட்சத்தில் எந்த ஆவணங்களையும் நீதிமன்றம் விசாரிக்க முடியும். திருடப்பட்ட ஆவணங்களாக இருந்தாலும் நீதிமன்றம் விசாரிக்க முடியும். தேசிய பாதுகாப்பு, ராணுவ ரகசியம் குறித்த ஆவணங்களையும் விசாரிக்க முடியும்.
தகவல் அறியும் உரிமை சட்டம்
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அதற்கு இடம் இருகிறது. தேசிய பாதுகாப்பு, ராணுவ ரகசியம் ஆகியவற்றை கூட, ஊழல் வழக்கு என்னும்பட்சத்தில் நீதிமன்றம் விசாரிக்க முடியும் என்று கூறினார். இதற்கான ஆவணங்களை, மத்திய அரசின் விதிமுறைகளை நீதிபதி ஜோசப் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் அளித்தார். இதனால் மத்திய அரசுக்கு இந்த வழக்கில் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.